பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மோடி எங்களைப் பற்றி யோசித்திருப்பாரா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை வடகிழக்கு மாநிலங்களில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி : கருப்பு பண மற்றும் கள்ள நோட்டு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்கிற பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது.
மோடியின் இந்த அறிவிப்பால் ஒரே நாள் நள்ளிரவில் 15 லட்சம் கோடி என்கிற அளவில் புழக்கத்தில் இருந்த நோட்டுகள் செல்லாதவை ஆகின. இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஆனால், இந்தியாவின் நலனுக்காக மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மோடி.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றோடு ஓர் ஆண்டு ஆகிறது. இதனால் பொருளாதாரம் முன்னேறி உள்ளது, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சொல்லிக்கொண்டாலும், இன்று வரை ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய அடியாகவே இந்த நடவடிக்கைப் பார்க்கப்படுகிறது.

பணமதிப்பிழப்பு தோல்வியா ?
புள்ளிவிபரங்கள், ஆய்வுகள் எல்லாம் இந்த நடவடிக்கை தோல்வி என்றே சொல்லுகின்றன. 86% நோட்டுகளை ஒரே நள்ளிரவில் செல்லாதவை ஆக்கிவிட்டு, இப்போது வரை 90% நோட்டுகளை புதிதாகக் கொண்டும் பழைய பொருளாதார நிலையை எட்ட முடியாததற்கு பக்கம்பக்கமாக காரணங்களை அடுக்கின்றனர்.

ஏ.டி.எம், வங்கி வாசல் மரணங்கள்
ஆனால், இதை எல்லாம் தாண்டி ஏ.டி.எம் வாசலிலும், பேங்க் வாசலிலும் கால்கடுக்க நின்ற 150 உயிர்களை இந்த நடவடிக்கைக்காக நாம் பலி கொடுத்து இருக்கிறோம். மக்களின் சேமிப்புகள் வீணடிக்கப்பட்டன, ஒரு சில கருப்புப் பண முதலைகளை பிடிப்பதற்காக ஒட்டுமொத்த இந்தியாவையே எலிப்பொறிக்குள் வைத்திருக்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்கள்
இதில் தென்னிந்தியா எவ்வளவோ பரவாயில்லை, வட இந்தியாவில் எதோ சொல்லிக்கொள்ளும்படியான வசதிகள் இருந்ததால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை சமாளிக்க முடிந்தது. வடகிழக்கு மாநிலங்களும், அந்த தொழிலாளர்களுக்கும் தான் இன்னமும் அந்த பிரச்னை தீர்ந்தபாடில்லை. சொந்த ஊரில் இருக்கும் அவரது குடும்பங்களும் பட்ட கஷ்டம் நிச்சயம் மோடிக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து வடமாநில தொழிலாளி ஒருவரிடம் பேசினோம். எங்கள் ஊரில் பிழைப்பதற்கு வழி இல்லாமல், பல மாநிலங்களில் ஹோட்டல்கள், கடைகள், அழகு நிலையங்கள் வடகிழக்கு மாநில பெண்களும் , மெட்ரோ, கட்டுமானத் தொழிலில் இருக்கும் ஆண் தொழிலாளர்களும் பணிபுரிகிறோம்.

வடகிழக்கு தொழிலாளர்களின் நிலை
இங்கே மொத்தமாகத் தங்கி இருக்கும் நாங்கள் எங்கள் சம்பளத்தை வங்கி கணக்குகளில் வைத்துக்கொள்வது இல்லை.காரணம் இங்கு இருக்கும் வங்கி வசதிகள் போல அங்கு இல்லை. மணி ஆர்டர் அனுப்பினாலும் தபால் நிலையம் வேண்டும். அவை எல்லாம் வாரத்திற்கு இரு நாள் தொடர்ந்து இயங்கினால் அதிசயம். அப்படியே போனாலும் அவர்களுக்கு கமிஷன் தர வேண்டும். அதனால் மாதம் ஒருவர் ஊருக்கு போகும்போது அவர்களிடம் கொடுத்து விடுவோம். அப்படி தான் அவர்கள் சம்பாதிக்கும் சொந்த ஊருக்கு போய் சேரும்.

ஊருக்கு பணம் அனுப்ப முடியாமல்...
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 8ம் தேதி தான் பலருக்கும் சம்பளம் வந்திருந்தது. எல்லாம் 500, 1000 ரூபாய் நோட்டுகள். கையில் பணம் இருக்கிறது. வங்கியிலும் டெபாசிட் செய்ய முடியாது, மாற்றவும் முடியாது. அந்த சமயத்தில் எங்களுக்கு உதவ யாருமே இல்லை. ஊரில் பணம் இல்லாமல் குடும்பம் தவிக்கிறது. எப்படியோ சிரமப்பட்டு பணத்தை மாற்றி அனுப்பி வைக்க இரண்டு மாதம் ஆகிவிட்டது. இந்த நிலை இனிமேல் யாருக்கும் வந்துவிடக்கூடாது என நம்மிடம் பேசிய வடமாநில தொழிலாளி பகிர்ந்து கொண்டார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே
எங்களைப் பொறுத்தவரை இந்த திட்டம் மிகவும் மோசமான தோல்வி. எங்களின் சேமிப்புகள் நசுக்கப்பட்ட தினமாகவே இதைப் பார்க்கிறோம். இன்னும் முழுமையாக வங்கிகள் கூட திறக்கப்படாத எங்களின் ஊர்களில் இதை நாங்கள் எப்படி எதிர் கொண்டிருக்க வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது என்று எழுப்பிய கேள்விக்கு நிச்சயம் மோடியிடமோ, இதை ஆதரித்து பேசுபவர்களிடமோ பதில் இருக்கப் போவது இல்லை.












Click it and Unblock the Notifications