''நைஜீரியர்கள் அனைவருமே போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்ல..''

கலு, கோவாவில் தங்கி இங்குள்ள கால்பந்து கிளப்களுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் ஆடி வரும் வீரர் ஆவார்.
சமீபத்தில் கோவாவில் நடந்த நைஜீரியர்களுக்கு எதிரான தாக்குதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவா கலாச்சார அமைச்சர் தயானந்த் மந்த்ரேகர் நைஜீரியர்கள் குறித்துப் பேசிய கருத்துக்களும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில்தான் கலு மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் தனக்கு கோவாவில் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், கோவாவில் கருப்பர் இனத்தவர்களுக்கு எதிரான போக்கு கடுமையாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், நான் கருப்பர் இனத்தவன். வடக்கு கோவாவில் தற்போது கருப்பர்களுக்கு எதிரான நிலை காணப்படுகிறது.
கடந்த ஆறு வருடமாக நான் கோவாவில் தங்கியிருக்கிறேன். சர்ச்சில் பிரதர்ஸ், டெம்போ, இப்போது கிளப் டி கோவா ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளேன். பலமுறை நான் கலன்கட்டில் உள்ள கிளப்புகளுக்கு ஓய்வுக்காக செல்வேன். அப்போதெல்லாம் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் இப்போது என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். கருப்பர் என்கிறார்கள். பயமாக இருக்கிறது. இதனால் நான் பார்ட்டிகளுக்குப் போவதில்லை.
ஆனால் இந்தியர்கள் அனைவருமே நிறவெறியர்கள் அல்ல. 90 சதவீத இந்தியர்கள் நிறவெறியர்கள் அல்ல. அதேபோல அத்தனை நைஜீரியர்களுமே போதைப் பொருள் கடத்தவர்கள் அல்ல. இதையும் இந்தியர்கள் உணர வேண்டும்.
கோவா அரசு சட்டவிரோதமாக கோவாவில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றி வருகிறது. இதில் புதிதாக எதுவும் இல்லை. எல்லா நாடுகளிலுமே நடப்பதுதான். நான் முறையான ஆவணங்களுடன் தங்கியுள்ளேன். எனவே எனக்குப் பயணில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications