ராஜஸ்தான் அக்கப்போருக்கு தீர்வு காண காங். தீவிர முயற்சி... சச்சின் பைலட் கோஷ்டி சமரசமாகுமா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து நீடிக்கும் உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், அஜய் மக்கான் இன்று ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
இதற்கு தீர்வு காணும் வகையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் அமரீந்தர்சிங்கின் கடும் எதிர்ப்பை மீறியே நவ்ஜோத்சிங் சித்து மாநிலத் தலைவராக்கப்பட்டார். இதன் மூலம் பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்தது.
ராஜஸ்தான் காங். குழப்பம்
இதேபோல் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனாலும் அசோக் கெலாட் சமரசத்துக்கு இடமில்லை என கூறி செயல்பட்டு வந்தார்.
ஜெய்ப்பூரில் காங். தலைவர்கள்
இதனால் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு அவ்வப்போது தற்காலிகமாக சமாதானம் செய்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் சென்றடைந்துள்ளனர்.
அதிருப்தியாளர்களுடன் ஆலோசனை
சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களுடன் கே.சி. வேணுகோபால், அஜய் மக்கான் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். முதல்வர் அசோக் கெலாட்டை கே.சி. வேணுகோபால், அஜய் மக்கான் ஆகியோர் சந்தித்தும் ஆலோசிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்?
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்க்கத்தில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடும் எனவும் தெரிகிறது. அதேபோல் சச்சின் பைலட்டை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.