ஜே.என்.யூ மாணவர் போனிலிருந்து பாக்., வங்கதேசத்துக்கு பறந்த 800 போன் அழைப்புகள்!
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் உமர் காலித்தின் செல்போனில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு 800 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பற்றி காவல்துறை விசாரித்து வருகிறது.
கடந்த 9ம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், போஸ்ட் ஆபீஸ் பற்றிய செமினார் நடத்த ஜனநாயக மாணவர் சங்கம் அனுமதி பெற்றிருந்த நிலையில், அதற்கு மாறாக தூக்கு தண்டனைக்கு உள்ளான நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு ஆதரவாக கூட்டம் நடந்துள்ளது.
இக்கூட்டத்தில், 'பாகிஸ்தான் வாழ்க' என்ற கோஷம் சில மாணவர்களால் எழுப்பப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசத்துரோகம்
கன்யா குமார் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அதை கண்டிப்பதாகவும் கன்யா குமார் கோர்ட்டில் தெரிவித்தார்.
மற்றொரு மாணவர்
அப்படியானால், இந்த கோஷத்தை முன்னெடுத்தது யார் என்ற கேள்வியை விரட்டிச் சென்ற போலீசாருக்கு கிடைத்த விடைதான் உமர் காலித். ஜனநாயக மாணவர் அமைப்பின் உறுப்பினரான உமர், அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சிக்கு மூளையாக இருந்துள்ளார்.
தலைமறைவு
28 வயதாகும் உமர், ஜே.என்.யூ பல்கலையில், வரலாற்று படிப்பியலில் பிஹெச்டி படித்து வருகிறார். கன்யா குமார் கைது செய்யப்படும்வரை, டெல்லி பல்கலை.யில் நடந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து பல தொலைக்காட்சி சேனல் விவாதங்களில் பேசி வந்த உமர், அதன்பிறகு திடீரென தலைமறைவாகிவிட்டார்.
பாகிஸ்தானுக்கு அழைப்பு
இவரது செல்போனில் இருந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு கடந்த சில நாட்களில் 800 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சில ஆங்கில செய்தி சேனல்கள் தெரிவித்தன. எனவே அவர் தீவிரவாதிகளின் தூண்டுதலில் மாணவர்களை துண்டாட நினைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கைது நடவடிக்கை
காலித் தொலைபேசி அழைப்பு விவரங்களை, டெல்லி போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள். கன்யாகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான் உமர் காலித்தின் பங்களிப்பு குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள உமரை கைது செய்தால் உண்மை வெளியே வரும் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.
மிரட்டல்கள்
இதனிடையே டெல்லியில் 'ஒன்இந்தியா' நிருபரிடம் பேசிய உமர் காலித்தின் தந்தை, இலியாஸ், தேச துரோக செயல்களில் ஈடுபடுவதாக கூறி, எனது செல்போனுக்கு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. எங்கள் குடும்பத்தாரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இன்டர்நெட் போன்
இந்த செய்தி வெளியான நிலையில், டெல்லி காவல்துறை, இலியாசிடம் மிரட்டல் அழைப்புகள் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. இலியாசின் செல்போனுக்கு இன்டர்நெட் போனில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது அப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிரட்டல் போன் அழைப்புகளை மேற்கொண்டது யார் என்பது பற்றியும் டெல்லி போலீசார் விசாரிக்கிறார்கள்.