செட்டிநாடு சிக்கன், மோர்க்குழம்பு, பில்டர் காபி - ஒபாமாவுக்கு சுடச் சுட விருந்து வைத்த இந்தியா
டெல்லி: டெல்லியில் நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட விருந்தின்போது பல்வேறு ருசியான உணவுகள் பரிமாறப்பட்டுள்ளனவாம். முக்கியமாக காஷ்மீர் மற்றும் வங்காள உணவு வகைகள், சைவம் மற்றும் அசைவம் கலந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரின் "நத்ரு கே கூலர்" அதாவது தாமரைத் தண்டு மற்றும் அத்திப்பழத்தால் ஆன கபாப் வகை மற்றும் கடுகுப்பொடி, கடுகு எண்ணெயில் சமைக்கப்பட்ட மீன் டிக்கா ஆகியவற்றை ஒபாமா விரும்பி சாப்பிட்டார்.
அசைவப் பிரியர்களுக்கு கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் பிரசித்தியான ஷ்ரிம்ப் காரவள்ளி என்னும் உணவு வகை, வறுத்த ஆட்டுக்குடல், முர்க் நீஜா கபாப் என்னும் கோழி கபாப் உணவு வகைகளும் வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் செட்டிநாடு உணவு வகையும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததாம்.
சைவ உணவுப் பிரியர்களுக்கு அன்னாசிப்பழத்தில் பன்னீர்வைத்து கிரில் செய்யப்பட்ட உணவு வகையும், குஜராத்தி வகையான கேலா மேத்தி நு ஷாக் அதாவது வாழைக்காயில் வெந்தயக்கீரையை சேர்த்து செய்த உணவு, காய்கறிகளை வேக வைத்து செய்த கஞ்சி, குஜராத் மோர்க்குழம்பு, பட்டாணி புலாவ், குலாப் ஜாமூன், கேரட் அல்வா, சர்க்கரை பாகில் ஊறவைத்த அதிரசம் மற்றும் பிரெட் வகைகள் வைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தின் பில்டர் காபி மற்றும் மூலிகை டீ ஆகியவையும் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டது.