ஒடிஷா ரயில் விபத்து: 89 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை - காத்திருக்கும் உறவுகள்!
புவனேஸ்வர்: 288 பேரை பலி கொண்ட ஒடிஷா ரயில் விபத்தில் இன்னமும் 89 உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் தொடருவதால் கண்ணீருடன் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மூன்றும் ஒடிஷாவின் பாலசோர் அருகே விபத்துக்குள்ளாகின. உலகையே உறைய வைத்த இந்த சில நிமிட விபத்துகளால் மொத்தம் 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை 89 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருக்கின்றன.

உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளமே காண இயலாத அளவுக்கு சிதைந்துள்ளன. இந்த உடல்கள் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இறந்தவர் தங்களது உறவுதான் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒடிஷா ரயில் விபத்தில் 48 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர். இவர்களது உடல்கள் பெரும்பாலும் கருகிய நிலையில் உள்ளன. இதுவும் உறவினர்களால் அடையாளம் காணப்பட முடியாத நிலைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 43 பேர் இந்த ரயில் விபத்தில் மரணம் அடைந்தனர். இவர்களை அடையாளம் காண பீகார் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து உறவினர்கள் ஒடிஷாவின் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ஒடிஷா ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் இன்னமும் சிகிச்சை பெறுகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். மொத்தம் 1,100 பேர் காயமடைந்தனர். 900 பேர் வீடு திரும்பி உள்ளனர். ஆனால் இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காணுவதில்தான் சிக்கல் தொடருகிறது என்கின்றனர்.

இதனிடையே இணையதளம், சமூக வலைதளம் உள்ளிட்டவைகள் மூலமாக இறந்தவர்களின் படங்கள் வெளியிடப்பட்டு அடையாளம் காண உதவுமாறு அரசு தரப்பில் தொடர்ந்து வேண்டுகோள் முன்வைக்கப்பட்டும் வருகிறது. இருப்பினும் உருக்குலைந்த உடல்களை அடையாளம் காண முடியாத நிலையே நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications