நடந்தது இதுதான்.. ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்து.. காரணம் என்ன? அதிகாரி பகீர் தகவல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது பெங்களூர்-ஹவுரா மற்றும் ஒரு சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதின. தற்போது வரை 50 பேர் பலியாகி உள்ள நிலையில் 350க்கும் அதிகமானவர்கள் காயடைமந்துள்ளனர். இந்நிலையில் தான் ரயில் விபத்து எப்படி நடந்தது? மொத்தம் எத்தனை பெட்டிகள் தடம் புரண்டன என்பது பற்றி ரயில்வே உயரதிகாரி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி இன்று கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தார். ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ரயில் தடம் புரண்டது. இந்த ரயில் தடம்புரண்ட இடம் வனப்பகுதியாகும்.

இதையடுத்து அந்த வழியாக வந்த பெங்களூர் யஷ்வந்தபுரம்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. அதற்கு பிறகு சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மொத்தம் 50 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 350க்கும் அதிகமானவர்கள் காயம்டைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தான் ரயில் விபத்தில் எத்தனை பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி ரயில்வே அதிகாரி முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி ரயில்வேயின் செய்தி தொடர்பு அதிகாரியான அமிதாப் சர்மா கூறியதாவது:
‛‛கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவம் இரவு 7.20 மணிக்கு நடந்தது. தடம்புரண்ட இந்த ரயில் பெட்டிகள் பக்கத்தில் சென்ற தண்டவாளத்தில் விழுந்தன. இந்த வேளையில் தான் பெங்களூர் யஷ்வந்தபுரத்தில் இருந்து ஹவுரா நோக்கி வந்த ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது மோதின. இதனால் பெங்களூர் யஷ்வந்தபுரம்-ஹவுரா ரயிலில் 3 முதல் 4 பெட்டிகள் தடம்புரண்டன. அதன்பிறகு அந்த பாதையில் வந்த சரக்கு ரயிலும் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதின. இப்படித்தான் விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன'' என்றார்.
ரயில் விபத்து நடந்த இடத்தில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. 4 ஒடிசா மாநில பேரிடர் மீட்பு குழுவினர், 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடபட்டு வருகின்றனர். மேலும் மீட்பு பணியில் மொத்தம் 65 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் டாக்டர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பிற மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் விரைந்துள்ளனர். அதோடு அண்டை மாவட்டங்களில் உள்ள டாக்டர்கள் விபத்து நடந்த இடம் மற்றும் அதன் அருகே விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications