தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான்? அதிகாரிகள் விளக்கமென்ன?
தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒரு புதிய கொரோனா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ஒமிக்ரான்' என்றும், அது 'கவலைக்குரிய திரிபு' என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில், 10 கொரோனா அபாய நாடுகளிலிருந்து பெங்களூருக்கு 584 பேர் வந்துள்ளனர். அதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய இரு இந்தியர்கள் முறையே நவம்பர் 11 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் புதிய ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை உறுதி செய்ய கொரோனா திரிபைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர நிர்வாகத்தினர் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
https://twitter.com/ANI/status/1464607969908117508
இதனைத் தொடர்ந்து, புதிய ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்வது தொடர்பாக நவம்பர் 27, சனிக்கிழமை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சுகாதார அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகளோடு ஒரு அவசர கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில் அம்மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகரும் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநில எல்லைகளை தீவிரமாக கண்காணிக்கவும், அம்மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்குள் வருபவர்கள் கட்டாயம் ஆர்டி - பிசிஆர் சோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- B.1.1.529 : ஓமிக்ரான் கொரோனா திரிபு 'கவலைக்குரியது' - உலக சுகாதார அமைப்பு
- தமிழ்நாட்டில் 'கட்டாய' கொரோனா தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற முடியுமா?
மாநில எல்லைகளில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், மூன்று சுழற்சி முறையில் எல்லைகளை கண்காணிக்கவும், அதற்கு தேவையான உதவிகளை அனைத்து துறையிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், 16 நாட்களுக்கு முன் கேரளாவில் இருந்து கர்நாடகா வந்த மாணவர்கள் மீண்டும் ஆர்டி - பிசிஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். பரிசோதனையில் நெகட்டிவ் வந்தவர்களுக்கு ஏழு நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தீர்மானித்துள்ளனர்.
கர்நாடகாவில் பொது இடங்களான ஹோட்டல்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொது நூலகங்கள், அரசு அலுவலகங்கள், மால்கள், விலங்கியல் பூங்காக்கள் போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள் இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்பாடுகள் எப்படி?
நேற்று சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் மற்றும் சுகாதாரத் துறைச் செயலர் ஜே ராதாகிருஷ்ணன் நேரில் சென்று மேற்பார்வை செய்தனர்.
அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவாமல் இருக்க போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு ஆர்டி - பிசிஆர் சோதனை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு பயணித்துவிட்டு வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய விமான நிலையங்களில் கொரோனா தொடர்பான பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக ஒரு உதவித் திட்ட மேலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
மேலும், இப்போதாவது தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் புரிந்து கொண்டு விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசியும் முகக்கவசமும் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கூட முகக்கவசம் அணிவதை கைவிட வேண்டாம் எனவும் கூறினார்.
பிற செய்திகள்:
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
- இசையைப் பெயராகச் சூட்டும் மேகாலயா பழங்குடி கிராமம் - ஓர் அதிசய வரலாறு
- இந்தியாவில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்திருக்கிறதா?
- B.1.1.529 : ஓமிக்ரான் கொரோனா திரிபு 'கவலைக்குரியது' - உலக சுகாதார அமைப்ப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்