குடகில் சுய விருப்பத்தோடு தங்கியிருக்கோம்.- தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வாக்குமூலம்
குடகில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கியுள்ளதாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.
குடகு: கர்நாடக மாநிலத்தில் தினகரன் ஆதரவு எம்எம்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் தமிழக போலீசார் விசாரணை செய்தனர். அவர்களிடம் அனைத்து எம்எல்ஏக்களும் சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் சோமவார்பேட்டை தாலுகா, குஷால்நகர் எல்லை 7வது ஓசகோட்டை என்ற பகுதியில் உள்ள பன்டிக்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
எம்எல்ஏக்களை யாரிடமும் பேசக்கூடாது என்று டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளதால், செய்தியாளர்களிடம் அவர்கள் தலைக்காட்டாமல் உள்ளனர். அவர்களை சந்திக்க செய்தியாளர்கள் முயற்சித்தாலும் ரிசார்ட் பாதுகாவலர்கள் அனுமதிக்காமல் தடுத்து வருகிறார்கள். செல்போன்களும் சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று கோவை பதிவு எண் கொண்ட வாகனங்களில் தமிழக போலீசார் குஷால் நகருக்கு சென்றனர். ஹோட்டலுக்குள் செல்லும் போது சீருடையில் சென்ற போலீசார், தமிழக எம்எல்ஏக்கள் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
எம்எல்ஏக்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கியிருக்கார்களா என்று போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அனைவரும் சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கியுள்ளதாகவும், யாரும் தங்களை கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் தங்களின் விசாரணையை முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த எம்எல்ஏவும் போலீசுடன் செல்லவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.