ரொம்ப அசிங்கமா போச்சு! லோக்சபாவில் பாஜக கொறடா உத்தரவை மீறல்.. 20 ஆப்சென்ட் எம்.பிக்களுக்கு நோட்டீஸ்!
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப லோக்சபாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜகவின் 20 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என 269 எம்.பிக்கள் மட்டுமே வாக்களித்தனர். லோக்சபாவில் பாஜக அணிக்கு 292 எம்பிக்கள் ஆதரவு இருக்கும் நிலையில் 269 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதனையடுத்து நேற்று பாஜக கொறடா உத்தரவை மீறி லோக்சபாவுக்கு வருகை தராத 20 எம்.பிக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபாவில் நேற்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாக்களைத் தாக்கல் செய்தார். அப்போது, ஒரே நேரத்தில் தேர்தல் என்ற யோசனை, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல் சுழற்சிகளை சீரமைக்க முன்மொழியப்படுகிறது. இது வாக்காளர்கள் தங்கள் தொகுதிகளில் ஒரே நாளில் மக்களவை மற்றும் சட்டமன்றம் என்ற அரசின் இரு அடுக்குகளுக்கும் வாக்களிக்க அனுமதிக்கும். இருப்பினும் வாக்களிப்பு நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நடக்கக்கூடும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது செலவுகளைக் குறைப்பதையும் அடிக்கடி தேர்தல் நடப்பதால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடுமையாக எதிர்த்தன. இந்த மசோதாவை உடனே வாபஸ் பெற வேண்டும் என்றும் இந்த கட்சிகள் வலியுறுத்தின. மேலும் திமுக எம்பி டிஆர் பாலு பேசுகையில், லோக்சபாவில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதாவை எடுத்துக் கொள்ளவே கூடாது எனவும் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்; இதற்காக இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்; இதனைத்தான் எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன என தெரிவித்தார்.
இதையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த நடைமுறையிலும் சிக்கல்கள் ஏற்பட்டன. சில எம்பிக்கள் முன் வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் திடீரென பழுதாகி நின்றன. இதனால் வாக்குச் சீட்டு முறையிலும் வாக்கெடுப்பு நடந்தது. இறுதியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கு ஆதரவாக 269 வாக்குகள் அரசுக்குக் கிடைத்தன.
லோக்சபாவில் பாஜக அணிக்கு மொத்தம் 292 எம்பிக்கள் ஆதரவு உள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதால் அனைத்து எம்பிக்களும் ஆஜராக வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இருந்தது. ஆனால் பாஜக தரப்புக்கு மொத்தம் 269 எம்.பிக்கள் ஆதரவுதான் கிடைத்தது. பாஜகவின் 20 எம்.பிக்கள் நேற்று சபைக்கே வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து லோக்சபாவுக்கு வராத- வாக்கெடுப்பில் பங்கேற்காத 20 எம்.பிக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications