வெங்காய விலை எப்போ குறையும் என்று ஜோசியம் சொல்ல முடியாது: சரத்பவார்
டெல்லி: உச்சத்தை தொட்டுள்ள வெங்காயத்தின் விலை எப்போது குறையும் என்று ஜோசியம் சொல்ல முடியாது. நான் ஒன்றும் ஜோதிடன் அல்ல என்று கூறியுள்ளார் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பேசிய அவர் வரத்து குறைவு, ஏற்றுமதி போன்றவைகளினாலேயே வெங்காயத்தின் விலை ரூ.90 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறினார்.
இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டேதானே இருக்கிறது. எப்போது குறையும் என்று உறுதியாக கூற முடியுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனை எதிர்பார்க்காத சரத்பவார் சரியான நாளைக்கூற நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல. நான் வெங்காயத்தை விளைவிக்கவில்லை. 2 அல்லது 3 வாரங்களில் குறையும் என்று கூறுவது எனது சொந்த கருத்து என்றார்.
வெங்காயம் விலை உயர்வுக்கு கனமழையே காரணம். ஆந்திர பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் காரிப் பருவ வெங்காய அறுவடை தொடங்கி விட்டது. இருப்பினும் மழை காரணமாக அவற்றை டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது.
மழை காரணமாக மகராஷ்டிர மாநிலம் நாசிக் உள்ளிட்ட இடங்களில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் காரிப் சாகுபடி வெங்காய வரத்து விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் கே.வி. தாமசுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சரத்பவார் கூறினார்.
விலை ஏற்றத்தை தடுக்க எகிப்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம். மாநில முதல்வர்கள், வெங்காய பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.