கருத்து கணிப்புகளை தடை செய்யக் கூடாது: பாஜக வலியுறுத்தல்
டெல்லி: தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது- தேர்தலில் தோற்பவர்கள்தான் தடை விதிக்க கோருவார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, மிசோரம், சத்தீஸ்கர் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றே அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவித்து வருகின்றன. அதனால் கருத்து கணிப்புகள் அறிவியல்பூர்வமானவை அல்ல என்ப்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு செயலாளர் கே.சி.மிட்டல் கடிதம் எழுதினார்.

அதே நேரத்தில் கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரான அருண்ஜெட்லி எழுதியுள்ள கட்டுரையில், கருத்து கணிப்பு என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு அங்கம். சிறிய அளவில் மாதிரியை எடுத்துக் கொண்டு மிகக்கவனமாக கருத்து கணிப்பு நடத்தப்படுகிறது.
அது, பெரும்பாலான நேரங்களில் சரியாக அமைகிறது. சில நேரங்களில் தவறாக அமைகிறது. அதற்காக அதை தடை செய்ய வேண்டும் என்று அர்த்தம் அல்ல. தோற்பவர்கள்தான் தடை கேட்பார்கள். கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது என்பது எங்கள் கருத்து.
கருத்து கணிப்பை தடை செய்வது அரசியல்சட்ட ரீதியாக அனுமதிக்கக்கூடியதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல. இந்த சர்ச்சையில் தலையிடாமல் விலகி நிற்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம். கருத்து கணிப்புகளின் முடிவுகளை ஏற்பதையும், நிராகரிப்பதையும் வாக்காளர்களின் முடிவுக்கே விட்டு விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதுபோல் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், முக்கியமான தேசிய தினங்களில் பிரதமர் உரை ஆற்றும்போது, அவரை வேறு யாருடனும் போட்டிக்கு உட்படுத்தி, விமர்சிக்கக்கூடாது என்று பிறப்பித்த உத்தரவும் கண்டிக்கத்தக்கது என்று எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications