400 எம்.பி.க்களுக்கு ஆதார் அட்டை இல்லை... போட்டோ எடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு முகாம்!
டெல்லி: ஆதார் கார்டு திட்டத்தை மீ்ண்டும் தூசு தட்டி எடுத்துள்ள மத்திய அரசு 2015ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 100 சதவீத மக்களுக்கு ஆதார் அட்டையை விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 790 எம்.பிக்களில் 400 பேரிடம் இன்னும் ஆதார் அட்டை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று முதல் 7 நாட்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஆதார் அட்டை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தாண்டிற்குள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை சுமார் 68 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 50 கோடி மக்களுக்கும், அடுத்த 8 மாதத்திற்குள் ஆதார் அட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தமுள்ள 790 எம்.பிக்களில் இன்னும் 400 பேர் ஆதார் அட்டை பெறவில்லை என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஆதார் அட்டை முகாம் நடைபெறுகிறது.
இன்று தொடங்கி 7 நாட்கள் இந்த முகாம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.பிக்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற அலுவலக ஊழியர்களும் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எம்.பிக்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பலவற்றையும் ஆதார் கார்டு அடிப்படையில் வழங்க மத்திய அரசு யோசித்து வருகிறதாம். எனவே அனைத்து எம்.பிக்களும் ஆதார் அட்டையை கண்டிப்பாக பெற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.