பெரிய தீவிரவாத இயக்கம் எது என்பதை காண்பிக்க நடந்த போட்டியே பெஷாவர் தாக்குதல்!
டெல்லி: தீவிரவாதிகளுக்கு நடுவே யார் பெரியவர் என்பதை காண்பிக்கும் போட்டியாகத்தான் பாகிஸ்தானின் பெஷாவரில் இன்று தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
தெரிக்-இ-தாலிபான் அமைப்புதான் பெஷாவரில் நடந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழுவுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் நடுவே நீண்ட காலமாக போட்டி இருந்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் தெரிக் இ தாலிபான் இயக்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது. சமீபத்தில் தெரிக் இயக்கத்தில் இருந்து பல போராளிகள் தாங்கள் சரியான பாதையை நோக்கி போகப்போகிறோம் என்று கூறி வெளியேறினர். இதனால் தெரிக் அமைப்பு கடும் கோபத்தில் இருந்து வந்தது.

அப்போதே தெரிக் அமைப்பு மீண்டும் பெரும் தாக்குதலை நடத்தி தன்னை நிரூபிக்கும் என்று அறிவித்தது. கராச்சி விமான நிலையத்தில் சில மாதங்கள் முன்பு நடத்தப்பட்ட தாக்குதலும் தங்களை நிரூபிக்க, தங்கள் பலத்தை பறைசாற்ற தெரிக் அமைப்பு நடத்தியதுதான். இன்றும் அதே நோக்கில் பள்ளி குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தங்களது இருப்பை நிலை நிறுத்த குழந்தைகளையும் கொல்ல தயங்காத தீவிரவாத அமைப்பு தெரிக் இ தாலிபான் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தீவிரவாதிகள் மத்தியில் ஆதரவு பெருகுவதை தெரிக் அமைப்பால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பெரிய ரவுடியாக தன்னை காண்பித்துக்கொள்ள எத்தகைய தாக்குதலையும் நடத்தும் வெறியுடன் தெரிக் இ தாலிபான் உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான தீவிரவாத இயக்கம் லஷ்கர்-இ-தொய்பாவாக உள்ளது. எனவே தெரிக் இ தாலிபான் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்திவருவது வாடிக்கை. இதுவரை 900 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் கொன்றுகுவித்துள்ளது. எனவே தங்களது போராட்டம் வீணாகுவதாக உணர்ந்து தாலிபான்கள் பலரும் ஐஎஸ்ஐஎஸ் நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர்.
சிலர் ஜமாதுல் ஆரார், ஜுன்டால்லா போன்ற பெயர்களில் தனி தீவிரவாத குழுக்களாக இயங்க தொடங்கியுள்ளனர். அதில் ஒரு அமைப்புதான் இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications