பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை; பாதிப்பு இல்லாமல் செய்ய முயற்சி: தங்கம் தென்னரசு
பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் போராட்டம் நடத்திவரும் நிலையில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
விமான நிலையம் அமைக்கப்படும் போது பாதிப்புகள் இல்லாத வகையில் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 13 ஊர்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் போன்றவை இவற்றில் அடங்கியிருக்கின்றன.
சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக தமிழ்நாடு அரசு வாக்குறுதி அளித்த நிலையிலும், வாழ்வாதாரம் பறிபோவதாகக் கூறி கிராம மக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும், சென்னை வரை வெள்ள அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.
பெங்களூரு, ஹைதராபாத்துடன் சென்னையை ஒப்பிட்ட அமைச்சர்
விமான நிலையம் அமைக்கத் தங்கள் விளை நிலத்தைத் தருவோருக்கு நிலத்தின் மதிப்பை விட 3.46 மடங்கு தர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாகவும், வேலைவாய்ப்பு தருவதுடன், வீடுகளை இழப்போருக்கு மாற்று இடம், வேறு வீடு உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாளும் திறன் பெற்றுள்ளது. 2025இல் ஆண்டுக்கு 3.5 கோடி பேர் பயன்படுத்துவார்கள் என்று தமது பதிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2009-19 காலகட்டத்தில் ஒன்பது சதவிகித வளர்ச்சி உண்டாகியுள்ளது. 2008இல் நாட்டில் மூன்றாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் தற்போது ஐந்தாம் இடத்துக்கு சென்றுள்ளது; அப்போது ஐந்தாம் இடத்தில் இருந்த பெங்களூர் விமான நிலையம் இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையம் 9% வளர்ந்துள்ள காலகட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் விமான நிலையங்கள் 14 % மட்டும் 12% வளர்ச்சி கண்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
மொத்தமுள்ள 13 கிராமங்களில் விளைநிலங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகள் பகுதி அளவு மட்டுமே விமான நிலையத்துக்கு போகும் நிலையில், சுமார் 2400 பேர் வசிக்கக் கூடிய ஏகனாபுரம் என்ற கிராமம் முற்றிலும் நில எடுப்பின் கீழ் வருகிறது.
இந்த கிராமம் உள்ள இடம், புதிதாக அமையவுள்ள விமான நிலையத்தின் இரு ஓடுதளங்களுக்கும் இடையே வருகிறது என்று இன்று குறிப்பிட்ட அமைச்சர், திட்ட மேலாண்மை ஆலோசகர்களுடன் ஆலோசித்து, கிராமங்களை மாற்றும் வழிகள் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், ஏகனாபுரம் கிராமம் பாதிக்காத வகையில் விமான நிலையத்தின் அமைப்பு மாற்றப்படுமா அல்லது கிராமமே ஒட்டுமொத்தமாக வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்று அவர் தெளிவாகக் கூறவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்