இஸ்ரேலுக்கான இந்திய தூதராக பவன் கபூர் நியமனம்!
டெல்லி: இஸ்ரேலுக்கான இந்தியாவின் புதிய தூதராக மொசாம்பிக் நாட்டுக்கான தூதராக பணியாற்றும் பவன் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிடம் இருந்து இந்தியா அதிக அளவு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலங்களில் பாலஸ்தீன விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் மத்திய அரசு இருந்து வந்தது.
ஆனால் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இருநாடுகளையும் சமமாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். பிரதமர் மோடியும் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனிடையே இஸ்ரேலுக்கான இந்திய தூதரான ஜெய்தீப் சர்கார் ஓய்வு பெறுவதையடுத்து பவன் கபூர் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர் பவன் கபூர். கடந்த 20 ஆண்டுகளாக பிரதமர் அலுவலகம் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றியாற்றி வருகிறார். மாஸ்கோ, லண்டன், ஜெனிவா, உக்ரைனின் கீவ் ஆகிய நகரங்களில் இந்திய தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்தவர் பவன் கபூர்.
1990ஆம் ஆண்டு ஐ.எப்.எஸ். பேட்ச் அதிகாரியான இவர் தற்போது மொசாம்பிக் நாட்டுக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார்.
லண்டனில் உள்ள காமன்வெல்த் தலைமை செயலகத்தில் ஆசிய, ஐரோப்பிய விவகாரங்களுக்கான அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றியவர் பவன் கபூர். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விரைவில் பவன் கபூர் தமது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.