'சோனியா முதுகில் குத்தியவர் சரத்பவார்'- மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் கடும் தாக்கு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முதுகில் குத்தியவர் மத்திய அமைச்சர் சரத்பவார் என்று மற்றொரு மத்திய அமைச்சரான கே.வி.தாமஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்த போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உணவு மற்றும் விவசாய துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அந்த துறையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.தாமஸ் இணை அமைச்சரானார்.
அதன்பிறகு 2011-ம் ஆண்டு கே.வி.தாமஸ் உணவு துறைக்கு தனிப்பொறுப்புடன் அமைச்சரானார். சரத்பவார் விவசாய துறையை கவனித்து வருகிறார்.
தொடர்ந்து கருத்து வேறுபாடு
அப்போது முதலே உணவு சட்டம், சர்க்கரை பற்றிய கொள்கைகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கச்சா சர்க்கரைக்கு மானியம் வழங்குவது தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால் 3 முறை நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில் அந்த பிரச்சினையில் முடிவு எடுக்கப்படவில்லை.
கே.வி. தாமஸின் புதிய புத்தகம்
இந்த நிலையில், உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் 110 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் முதுகில் விழுந்த குத்து என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் எழுதப்பட்டு இருப்பதாவது:
சோனியா வெளிநாட்டுக்காரர்
கடந்த 1999-ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுக்காரர் என்ற பிரச்சினையை கிளப்பி அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் சரத்பவார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பி.ஏ.சங்மா தான் முதன் முதலில் இந்த பிரச்சினையை கிளப்பினார். பின்னர் சங்மா இந்த பிரச்சினையை கைவிட்ட போதிலும் சரத்பவார் அதை பிடித்துக்கொண்டார்.
முதுகில் குத்தியது..
கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தி அதற்கு வலுவூட்டியவர் என்று சோனியா காந்தியை சரத்பவார் புகழ்ந்த போதிலும், அவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்று மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியால் முறியடிக்க முடியாது என்றும் கூறினார். அந்த பிரச்சினையை பெரிதாக்கி சோனியா காந்தியின் முதுகில் குத்தியது போன்ற காரியத்தை செய்தவர் சரத்பவார்.
நம்பிக்கையற்றவர்..
சரத்பவார் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் அவருக்கும், சோனியா காந்திக்கும் சுமுகமான உறவு இருந்தது இல்லை. சரத்பவார் திறமையானவர் என்ற போதிலும் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்ற ராஜீவ் காந்தியின் கருத்தை மனதில் கொண்டு அவரிடம் இருந்து சோனியா காந்தி சற்று விலகியே இருந்தார்.
அர்ஜூன்சிங் இடம்
காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் 2-வது நிலையில் இருந்த அர்ஜூன் சிங் வகித்த இடத்தின் மீது சரத்பவார் கண் வைத்து இருந்தார்.
பிரதமர் கனவு
13-வது லோக்சபா தேர்தலுக்கு பின் சோனியா காந்தி பிரதமர் ஆகிவிட்டால், பிரதமராகும் தனது கனவு ஒருபோதும் பலிக்காது என்ற எண்ணம் சரத்பவாருக்கு இருந்தது.
இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது.