கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. மோடிக்கு குவியும் கோரிக்கை!
சென்னை: பெங்களூரில் இன்று நடந்த வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உச்சகட்டமாக 50க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பஸ்களை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும், உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெங்களூரு நகரம் இன்று வரலாறு காணாத வன்முறையைச் சந்தித்துள்ளது. காலை முதல் இன்னும் விடாமல் தொடர்ந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுடள்ளனர் போராட்டக்காரர்கள். அவர்களை அடக்க முடியாமல் அல்லது அடக்கத் தெரியாமல் காவல்துறையினர் திணறிக் கொண்டுள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பம் பெரும் பீதியில் சிக்கித் தவிக்கிறது.
டிஎன் என்ற எழுத்தைப் பார்த்தாலே வெறி கொண்டு தாக்கி வாகனங்களை சேதப்படுத்தி தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இன்று உச்சகட்டமாக ஒரே இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 65 ஆம்னி பேருந்துகளை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது ஒரு கும்பல். இது திட்டமிட்ட செயலா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து பெங்களூருக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று மக்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழர்களுக்கு எதிராக இவ்வளவு வன்முறை நடந்தும் கூட மத்திய அரசு அமைதி காப்பதை பலரும் கண்டித்து வருகிறார்கள்.
@CNNnews18 @tv9kannada In Karnataka ruling govt engaged with rioters against TN estabs Modiji don't be silent pl sack Kar govt immediately
— Subramaniam Vaidyana (@SubramaniamV2) September 12, 2016
மேலும் உச்சநீதிமன்றம் மட்டுமே கர்நாடக அரசை கடுமையாக கண்டித்து வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வேல்முருகன் கண்டனம்:
இதற்கிடையே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழருக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிய கர்நாடகா அரசை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-
கர்நாடகாவுக்கு ராணுவத்தை அனுப்பி தமிழரைப் பாதுகாக்க தமிழக முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். தமிழர்கள் தொடர்ந்தும் கையாலாகாதவர்களாக இருந்து கொண்டிருக்கமாட்டார்கள் எனவும் எச்சரிக்கை செய்கிறேன் ; கர்நாடகத்தில் தமிழருக்கு சொந்தமான ரூ200 கோடி சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.