உ.பி.: தண்ணீர் ரயிலை போட்டோ எடுக்கையில் புகைப்பட பத்திரிக்கையாளர் மின்சாரம் தாக்கி பலி
லக்னோ: இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புகைப்பட பத்திரிக்கையாளரான ரவி கனோஜியா ரயிலை புகைப்படம் எடுக்கையில் மின்சாரம் தாக்கி பலியானார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் டெல்லி பிரிவில் புகைப்பட பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தவர் ரவி கனோஜியா(34). அவர் பன்டல்கன்ட்டில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் குறித்து புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகருக்கு சென்றார்.

அங்கு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ரயிலை புகைப்படம் எடுத்தார் கனோஜியா. மத்திய அரசு அனுப்பி வைத்த அந்த தண்ணீர் தேவையில்லை என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்ததால் அந்த ரயில் அங்கேயே நான்கு நாட்களாக நின்றது.
இந்நிலையில் ரயிலில் உள்ள நீர் சுத்தமாக உள்ளதா என்பதை புகைப்படம் எடுக்க ரயிலின் மீது ஏறினார் ரவி. அப்போது மின்வயர் அவர் மீது பட்டு மின்சாரம் பாய்ந்து அவரது உடல் தீப்பிடித்து தூக்கி வீசப்பட்டது.

இதில் ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ரயில் ரட்லாமுக்கு கிளம்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து அறிந்த உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரவியின் குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
ரவிக்கு பெற்றோரும், 3 சகோதரிகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications