"திட்டமிட்ட படுகொலை.. விசாரணையில் எல்லாம் தெரியும்!" பாடகர் கேகே மரணம்! புது குண்டை போடும் பாஜக
கொல்கத்தா: பாடகர் கேகே எதிர்பாராத விதமாக உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தை இப்போது பாஜக கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் ஹிட் கொடுத்த முக்கிய பாடகர்களில் ஒருவர் கிருண்குமார் குன்னாத். கேகே என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தமிழ், இந்தி, குஜராத்தி என பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார்.
53 வயதான பாடகர் கேகே கொல்கத்தாவின் நஸ்ருல் மஞ்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் ஹோட்டலுக்கு திரும்பி உள்ளார்.
ஏசி வேலை செய்யவில்லை.. ரொம்ப வியர்க்குது.. என்னால் முடியல.. பாடகர் கே.கே.வின் கடைசி வீடியோ
உயிரிழந்தார்
அப்போது அறைக்குச் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக மரைடைப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவர் ஹோட்டல் படிக்கட்டுகளில் இருந்து அப்படியே கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இயற்கைக்கு மாறான மரணம்
அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். பாடகர் கேகேவின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் கூட்டம் அளவு கடந்து இருந்ததாகவும், ஏசி வேலை செய்யவில்லை என்று பாடகர் கேகே புகார் அளித்தாகச் சிலர் தெரிவித்தனர். இதனால் போலீசார் சந்தேகத்திற்கு இடமான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
திட்டமிட்ட படுகொலை
இது குறித்து பாஜக எம்பி திலீப் கோஷ் கூறுகையில், "இதை நான் மீண்டும் சொல்கிறேன், அமித் ஷா சொன்னது போல் இது ஒரு கொலையே தவிர வேறொன்றுமில்லை. வங்காளத்திற்குச் சென்றால் நீங்கள் இறந்துவிடுவீர்கள்! வங்கத்திற்கு வந்து அவர் உயிர் இழந்து உள்ளார். அவர் கலந்து கொண்டது கல்லூரி நிகழ்ச்சி அல்ல. திரிணாமுல் கட்சி ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சி. கூட்டத்தைக் கூட்டி வலுக்கட்டாயமாக அவரை பாட வைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லை... அவர் வெளியேற விரும்பினார். இது ஒரு திட்டமிட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை, இப்போது சமாளிக்க, அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி உள்ளார்.
நிர்வாக தோல்வி
அதேபோல மேற்கு வங்காள பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், "நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இதற்குப் பொறுப்பு. இந்த நிகழ்வை திரிணாமுல் மாணவர்களின் பிரிவுதான் ஏற்பாடு செய்துள்ளனர். 2 ஆயிரம் பேர் அமரும் அரங்கில் 7 ஆயிரம் பேரைக் கூட்டினர். காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? அவர்கள் இந்த விஷயத்தைக் கவனித்து இருக்க வேண்டும். அங்கு ஏசி கூட வேலை செய்யவில்லை. இது முழு நிர்வாக தோல்வி" என்று சாடியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம்
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இயற்கைக்கு மாறான காரணங்களால் அவர் இறக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவினர் பிணத்தை வைத்து அரசியல் செய்வதாகச் சாடியுள்ளது.