துப்பாக்கியைத் தூக்கிப் போட்டுவிட்டு ஏர்கலப்பையை நம்புங்கள் – பிரதமர் மோடி
தும்கா: ஜார்க்கண்டில் துப்பாக்கி ஏந்தி போராடுவதை விட ஏர் கலப்பையை ஏந்தி உழைத்தால்தான் வளர்ச்சியை எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் சட்ட மன்ற தேர்தலுக்கான 5வது கட்ட ஓட்டுப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடக்கிறது.

இந்நிலையில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் நேற்று நடந்த பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி , "துப்பாக்கி பட்டனைஅழுத்தினால் ஒரு உயிரை எடுக்க முடியும். ஆனால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அழுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றினால் நாடு வளர்ச்சியடையும்.
துப்பாக்கிகளை விடுத்து, ஏர் கலப்பையை கையில் எடுத்து உழைத்தால் வளர்ச்சி என்ற அறுவடை செய்யலாம்.
வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் மத்தியில் இருந்தபோது தான், பழங்குடியினர் நலத் துறைக்கென தனி அமைச்சகமும், பட்ஜெட் ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டன.
பழங்குடியின மக்களின் நிலப் பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரப்போவதாக சில கட்சிகள் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கின்றன.
பா.ஜ.க மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தான் அந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்திருக்கின்றன.இங்கே நிலக்கரி வளம் அதிக அளவில் இருக்கிறது.
தற்போது அந்தத் துறை இருளில் மூழ்கி கிடக்கிறது. அதனை முறையாகப் பயன்படுத்தினால் நாட்டிற்கே வெளிச்சம் கொண்டு வரலாம்.இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.எனவே வளர்ச்சியயடைய செய்ய பா.ஜ.கவுக்கு ஓட்டளியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications