மோடி, ஜேட்லி, ராஜ்நாத் மூவரும் வெளிநாட்டில்... யார் புது 'தல.. டெல்லியில் சர்ச்சை!
டெல்லி:பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மூவரும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால் மத்திய அரசை வழிநடத்தும் தலைவர் யார் என்பதில் சர்ச்சை வெடித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக வெளி நாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் நாளை மறுநாள் இரவு டெல்லி திரும்ப உள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் உள்ள நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள புறப்பட்டு சென்றுள்ளார். அது போல மத்திய அமைச்சரவையில் மோடி, அருண்ஜேட்லி ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளார்.
இதன் காரணமாக மத்திய அமைச்சரவையின் முதல் 3 முக்கியமானவர்களும் ஒரே சமயத்தில் இந்தியாவில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இந்தியாவில் இந்த நிலையே நீடிக்க உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பாதுகாப்புக்கான மத்திய அமைச்சக கமிட்டியில் 5 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இன்றும் நாளையும் நாட்டை வழி நடத்துவது யார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. பொதுவாக இப்படி முக்கிய தலைவர்கள் வெளிநாட்டுக்கு சென்று விடும் போது அடுத்த இடத்தில் இருப்பவர் நாட்டை வழி நடத்துவார் என்று அறிவிக்கப்படும்.
ஆனால் இந்த முறை அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் மோடி, அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சுஷ்மா சுவராஜ் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.