என் தாயை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்.. காங்கிரஸுக்கு மோடி கடும் கண்டனம்
சதர்பூர், மத்தியப் பிரதேசம்: காங்கிரஸ் கட்சியால் என்னை விமர்சிக்க முடியவில்லை. என்னைத் தொடக் கூட முடியவில்லை. ஆனால் அதற்காக எனது தாயை அவர்கள் விமர்சிப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது காங்கிரஸை கடுமையாக அவர் சாடினார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாபர், சரிந்து வரும் ரூபாய் மதிப்பை, மோடியின் தாயாரின் வயதுடன் இணைத்து பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதைத்தான் இன்று கண்டித்தார் பிரதமர் மோடி.
மோடி பேச்சின்போது கூறியதாவது: பேசுவதற்கு அவர்களிடம் விஷயம் இல்லை. என்னைத் தொடக் கூட முடியவில்லை. விமர்சிக்க முடியவில்லை. இதனால் வயது முதிர்ந்தவர்களை விமர்சித்துப் பேசுகிறார்கள். இது தவறு.
மேடம் ஆசியுடன் நடந்த ஆட்சி
இந்த நாட்டின் 125 கோடி மக்கள்தான் எனது ஆட்சியின் அதிகாரம். இதை எந்த ஒரு "மேடமும்" (சோனியாவைச் சொல்கிறார்) ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தவில்லை. இது மக்களால் கட்டுப்படுத்தப்படும் ஆட்சி.
கொள்ளையடித்த பணக்காரர்கள்
மேடம் ஆசியுடன் நடந்த ஆட்சியின்போதுதான் பெரும் பெரும் பணக்காரர்கள் நாட்டின் வளத்தை கொள்ளையடித்தனர். அரசு கருவூலத்தை காலி செய்தனர். ஆனால் எங்களது அரசு இளைஞர்களுக்குத் தேவையானதை வங்கிகள் மூலம் கொடுத்து வருகிறது. வங்கிகளை நாங்கள் இளைஞர்களுக்காக திறந்து விட்டுள்ளோம்.
அந்த மாமாக்களைத் தெரியலையா
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகானை மாமா என்று கிண்டலடிக்கிறார்கள். ஆனால் அவர்களது கண்ணில் ஒட்டாவியோ குவாட்டரோச்சி மாமா தெரியவில்லையா.. வாரன் ஆண்டர்சன் மாமா தெரியவில்லையா.. !
மீண்டும் வர முடியாது
பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டதால்தான் 15 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய பிரதேசத்தை விட்டு காங்கிரஸ் கட்சி விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் அது ஆட்சிக்கு வர முடியாது என்றார் மோடி.