சடங்குக்கு நடந்தேறிய மன்மோகன்சிங் செய்தியாளர் மாநாடு..
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு காங்கிரஸ் கட்சிக்கோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கோ மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடிய ஒன்றாக இல்லாமல் ஒரு சடங்கு போலவே நடத்தப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங், செய்தியாளர்களை சந்திப்பதே அபூர்வம்தான். அதைத்தான் நேற்றும் செய்தார். ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் அரசு செய்த திட்டங்கள் என்ன? ஏன் மக்கள் அதற்கு வாக்களிக்க வேண்டும்? என்பதையெல்லாம் பற்றி விவரிக்கவில்லை மன்மோகன்சிங்.
மாறாக தாம் ஓய்வு பெறப் போவதையும் தாம் மீண்டும் பிரதமராக மாட்டேன் என்று அறிவிப்பதற்கான ஒரு கூட்டமாகவுமே பயன்படுத்திக் கொண்டார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஊழல்
மன்மோகன்சிங் தமது பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல் தொடர்பாகவும் பேசினார். ஆனால் தமது முதல் கட்ட ஆட்சியின் போது ஊழல் நடந்ததை ஒப்புக் கொண்டு பேசினார். இந்த ஊழல்கள் ஒன்றும் பெரிதானவை அல்ல என்ற தொனியிலும் பேசினார் மன்மோகன்.
யார் மீது குற்றம்?
ஊழல் பற்றி பேசிய மன்மோகன்சிங், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்றவற்றில் வெளிப்படையான முறை பின்பற்றப்பட்டது என்றார். அப்படியானால் ஊழலுக்கு வழிவகுத்தது எப்படி? வெளிப்படையான முறையை பின்பற்றாமல் தமது பேச்சை மீறி முன்னாள் அமைச்சர் ஆ. ராசா செயல்பட்டார் என்கிறாரா? நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் தாமே தமது அமைச்சரவை முடிவை மீறி செயல்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாரா?
வீரபத்ர சிங் ஊழல்
இதேபோல் ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீதான ஊழல் புகார் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒரு விளக்கம் அளித்தார் மன்மோகன். பாஜக தலைவரின் கடிதம் 29-ந் தேதி வந்தது என்றும் அது தொடர்பான பத்திரிகை செய்திகளை பார்த்தேன் என்றும் இன்னும் அந்த புகார் பற்றி ஆராய நேரம் இல்லை என்றும் பதில் தெரிவித்தார். இதுதான் ஒரு மாநில முதல்வர் மீதான ஊழல் புகார் மீது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படும் லட்சணம் என்று எடுத்துக் கொள்ளலாமோ?
விலைவாசி உயர்வு
மேலும் பணவீக்க விகிதத்தை தம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போனது என ஒப்புக் கொள்கிறார் மன்மோகன். ஆனால் உயரும் விலைவாசி ஒரு பிரச்சனை அல்ல என்கிறார். அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் இந்தியர்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டிருக்கிறது என்கிறது சர்வதேச தொழிலாளர் ஆணைய அறிக்கை. ஆனால் யதார்த்தத்தை மூடி மறைத்து இப்படியா பிரதமர் சமாளிப்பது?
அணுசக்தி ஒப்பந்தம்
நீங்கள் பிரதமராக இருந்த போது சாதித்தது என்ன என்ற கேள்விக்கு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுதான் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். ஆனால் நடைமுறையில் தகவல் அறியும் உரிமை சட்டம், அனைவருக்கும் கல்வி, லோக்பால் சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என்று பல திட்டங்கள் இருந்தும் அவற்றையெல்லாம் விட அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்தான் உச்சமானது என்கிறார் பிரதமர். இதை எப்படி மக்கள் ஏற்பார்களோ?
மோடி விவகாரம்
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து மிகக் கடுமையாகவே நேற்று பேசினார் மன்மோகன்சிங். அகமதாபத் தெருக்களில் ஆயிரக்கணக்கானோரை கொன்றதை திறமை என மோடி கருதுவதை ஏற்க முடியாது.. அவர் பிரதமரானால் நாட்டுக்கு பேரழிவுதான் என்றெல்லாம் சாடினார். ஆனால் இப்படி தாம் பேசுவதற்கான தார்மீகமற்றவராக சீக்கியர் கலவரம் தொடர்பாக பேசினார். 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலைக்கு மன்னிப்பு கோருகிறோம்.. இனி அதுபோல் நிகழக்கூடாது என்றார். அப்படியானால் குஜராத் கலவரம் இனி நிகழாது..நிகழக்கூடாது என்ற மோடியின் கருத்தும் சரியானதாகிவிடும் அல்லவா?
ஆம் ஆத்மி
டெல்லியில் 3 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தியது ஆம் ஆத்மி கட்சி. அந்த கட்சி, காங்கிரஸ்- பாஜகவுக்கு பெரும் சவாலாகவே உருவெடுத்திருக்கிறது. ஆனால் அந்த கட்சி மீது மக்கள் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்று போகிற போக்கில் ஆதரவு கருத்தை தெரிவித்ததும் மன்மோகன்சிங் கூட ஆம் ஆத்மிக்கு ஓட்டுப் போட்டுவிடுவார் என்று அக்கட்சியினர் கிண்டலடிப்பதும் தமது கட்சியின் எதிரியைப் பற்றி என்ன மாதிரியான மதிப்பீட்டை காங்கிரஸ் வைத்திருக்கிறது? என்பதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது.. இந்த வியூகமெல்லாம் எப்படித்தான் காங்கிரஸுக்கு கை கொடுக்குமோ?