7 நாள் பயணமாக இன்று அமெ. செல்கிறார் மோடி. 60 ஆண்டுகளுக்குப் பிறகு அயர்லாந்து செல்லும் இந்திய பிரதமர்
டெல்லி : அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தனது 7 நாட்கள் சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
இன்று தொடங்கி 29 ஆம் தேதி வரை அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிலிக்கான் வேலியில் அவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
இந்த பயணத்தின் போது அந்நாடுகளில் உள்ள பெரும் தொழில் அதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுகிறார். மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு ஏற்கனவே அவர் அமெரிக்கா சென்றிருந்த போது மேடிசன் சதுக்கத்தில் பேசியது போன்ற ஒரு விரிவான நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தின் போது மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகள் குறித்து மோடி தனது பேஸ் புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அயர்லாந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து பிரதமர் கென்னியுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளின் உறவும் வலுப்படும் என்று மோடி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வாழும் இந்தியர்களையும் சந்தித்து பேசுகிறார். அங்கிருந்து 24 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் செல்கிறார். அங்கு ஐநா சபையில் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றுகிறார். அமெரிக்காவுக்கு மோடி செல்லும் இரண்டாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒபாமாவால் ஏற்பாடு செய்யப்படும் அமைதிக்கான மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார். நியூயார்க்கில் ஜி 4 நாடுகளான பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் இந்த நிகழ்ச்சிகளின் போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்திக்கிறார். மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500 தொழில் அதிபர்களுடன் உரையாடும் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலீடு செய்யவும் அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
நியூயார்க்கின் நிகழ்ச்சிகளின் போது மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் ஒரே ஹோட்டலில் தங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்போது இருவரும் சந்தித்து பேசுவார்களா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பின்னர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மேற்கு கரை பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 33 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல் பிரதமர் மோடி ஆவார். மேலும் பேஸ்புக்கின் தலைமையிடமான டவுன் ஹாலில் நடைபெறும் பார்வையாளர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
அப்போது அதன் தலைவர் மார்க் ஜூக்கெர்பெர்கும் உடன் இருப்பார். 27ம் தேதி இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சிலிக்கான் வேலியில் இந்தியர்களை மோடி சந்தித்து பேசுகிறார். மோடியின் வருகையை முன்னிட்டு சிலிக்கான் வேலியில் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.