ரொம்ப ஓவரா ஆட்டம் போடுறீங்க.. இதற்கான விளைவுகளை மே 2-ல் பார்ப்பீங்க.. மம்தாவை விளாசிய மோடி!
கொல்கத்தா: மம்தா பானர்ஜி விளையாட்டை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வருகிற மே 2-ம் ம் தேதி மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வெளியேறும் கதவை காண்பிப்பார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை தண்டிக்க மேற்கு வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெருமளவில் முன்வந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
வங்காளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் பணியாற்றுவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரம்
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. இதனால் பாஜகவின் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் ஒரு பக்கம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கான்டாய் பகுதியில் பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:- தேர்தல்கள் மூலை முடுக்காக நடக்கும்போது திரிணாமுல் அரசு ' டுவாரே டுவாரே சர்க்கார் '(வீட்டு வாசலில் அரசாங்கம்) என்று கூறுகிறது. மம்தா பானர்ஜி தீதி(அக்கா) உங்கள் விளையாட்டை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வருகிற மே 2-ம் ம் தேதி மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வெளியேறும் கதவை காண்பிப்பார்கள்.
தாய்மார்கள் பாஜகவுக்கு ஆதரவு
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை தண்டிக்க மேற்கு வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெருமளவில் முன்வந்துள்ளனர். ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மம்தா பானர்ஜியால் பதிலளிக்க முடியவில்லை. திரிணாமுல் கட்சியில் உள்ள பணம் பறிக்கும் குண்டர்கள் குறித்தும் மம்தாவால் பதிலளிக்க முடியவில்லை. மத்திய அரசு மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிய நிவாரணம் மருமகனின் குடோனில் சிக்கியது எப்படி?
நாம் பாரத மாதாவின் மகன்
நாங்கள் மேற்கு வங்கத்தில் சுற்றுலா கும்பல் என்று அழைக்கப்படுகிறோம். எந்த இந்தியரும் இந்த நிலத்தில் வெளிநாட்டவர் அல்ல. ஒவ்வொரு இந்தியரும் நமது பாரத மாதாவின் மகன். வந்தே மாதரம் மூலம் வங்காளம் தேச மக்களை இணைத்தது. மம்தா நீங்கள் சொல்வது போல் நாங்கள் இங்கு விளையாட வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம். வங்காளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.