கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து மாநில முதல்வர்களுடனும் இணக்கம்: மோடி பேச்சு
பெங்களூர்: அனைத்து கட்சி முதல்வர்களுடனும் இணைந்து செயல்பட்டு தேசத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
தென்னிந்தியாவின் முதலாவது உணவு பூங்காவை கர்நாடக மாநிலம், பெங்களூர் அடுத்த தும்கூரில் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் பாதல், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, அனந்த்குமார் மட்டுமின்றி முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நரேந்திரமோடி பேசியதாவது: மாநிலத்திலும், மத்தியிலும் வேறு கட்சிகளின் ஆட்சி நடந்தாலும், தேசம் ஒன்றுதான். கர்நாடக முதல்வரும், பிரதமரும் வேறு கட்சியினராக இருக்கலாம், ஆனால் நாட்டு நலனுக்காக ஒன்றாக சேர்ந்துள்ளோம்.
அனைத்து மாநில முதல்வர்களுடனும் இணைந்து நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய-மாநில அரசுகள் நடுவே நல்லுறவு ஏற்படவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவி செய்வதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால் அனைத்து மாநிலங்களையும் முன்னேற்ற வேண்டும் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நோக்கம்.
உணவு மற்றும் விவசாய பொருட்கள் வீணாவதை தடுத்தால் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடியை நாம் சேமித்துவிட முடியும். அன்னமே தெய்வம் என்பது நமது நாட்டின் பழமொழி. ஜெய் கிசான், ஜெய் ஜவான் என்ற கோஷத்துடன், ஜெய் விஞ்ஞான் என்ற கோஷத்தையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன் வைத்தார். தற்போதைய மத்திய அரசும் அந்த கோஷத்துக்கு ஏற்ப, விவசாயம், ராணுவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்கும்.
{ventuno}
மாநிலங்களின் உணர்வுகளை தெரிந்து கொண்டு, புரிந்துகொண்டுதான் மத்திய அரசு எந்த திட்டத்தையும் அமல்படுத்தும். மாநிலங்கள் வலிமையாகும்போது, இயல்பாகவே தேசமும் வலிமையாகிவிடும். மாநில முதல்வர்களுடன் தோளோடு தோள் கொடுத்து செல்ல நான் தயாராக உள்ளேன். இவ்வாறு மோடி பேசினார்.
பெங்களூரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தும்கூர் உணவு பூங்கா, ஆசியாவிலேயே மிகவும் பெரியது. 110 ஏக்கரில் பரந்து விரிந்த இந்த உணவு பூங்காவில் 22 ஆயிரம் டன் உணவு பொருட்களை சேமித்து வைக்க முடியும். இந்த பூங்காவில் உணவு பதப்படுத்தும் 30 நிறுவனங்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளன.