‛ரூ.15 லட்சம்’.. அட இது திமுக பாணியாச்சே! சத்தீஸ்கரில் மோடியை விமர்சிக்க ராகுல் எடுத்த புதுஅஸ்திரம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று அங்கு பிரசாரம் செய்தார். அப்போது அவர் திமுக பாணியில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வாக்கு சேகரித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7 ம் தேதி முதற்கட்டமாகவும், நவம்பரம் 17 ம் தேதி 2வது கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதனால் ஆளும் கட்சியாக காங்கிரஸ் தேர்தலை சந்திக்க உள்ளது. எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறும் நோக்கத்தில் பாஜக இந்த தேர்தலை எதிர்கொள்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெல்ல வேண்டி உள்ளது. இதனால் தற்போது காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மாநிலத்தில் சூறாவளி பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.இந்நிலையில் தான் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி சத்தீஸ்கரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
கான்கேர் மாவட்டம் பானுபிரதாப்பூர் சட்டசபை தொகுதியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது நெசவாளர்கள் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்புகளையும் ராகுல் காந்தி வெளியிட்டார். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிடும்போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தாக்கி பேசினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:

மாநிலத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். காங்கிரஸ் கட்சி என்பது சொல்லும் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. ஆனால் அவர்கள்(பாஜக) அப்படியில்லை. விவசாயிகளின் கடன்களை அவர்கள் தள்ளுபடி செய்யவில்லை. மாறாக அவர்கள் அதானியின் கடனை மட்டுமே தள்ளுபடி செய்தனர். நாங்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என அறிவித்து அதனை நிறைவேற்றினோம். தற்போதும் அதேபோன்று விவசாய கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை இப்போது அளித்து வரும் நாட்களில் நிறைவேற்றுவோம்.
பிரதமர் மோடி ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறினார். ஆனால் அதனை செய்யவில்லை. நான் ஒருபோதும் தவறான வாக்குறுதிகளை உங்களுக்கு வழங்க மாட்டேன். நான் செய்வதை மட்டும் தான் சொல்லுவேன். பிரதமர் மோடி விவசாயிகளின் பணத்தை அதானி உள்ளிட்ட 2-3 தொழிலதிபர்கள் பயன்பெறும் வகையில் வழங்கி வருகிறார்'' என விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications