100 பேர் பலி.. அசாம் வெள்ளத்தை விட சிவசேனா ஆட்சியை கவிழ்ப்பது தான் மோடிக்கு முக்கியம்! காங் சுளீர்
கவுஹாத்தி: அசாமில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 100 பேர் பலியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளாமல் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
அசாமில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.
கார் இல்லை! ஹவுசிங் போர்டு வீட்டில் தான் குடித்தனம்! அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எளிமை!
பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்
100 பேர் பலி
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 12 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டு அசாம் மாநில வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 32 மாவட்டங்களில் உள்ள 4,941 கிராமங்களில் 54.7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 99,026 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளம்
கோபிலி, திசாங் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளில் பல இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. தர்ராங், பர்பேட்டா மற்றும் கம்ரூப் மாவட்டங்களில் ராணுவத்தினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உதவி செய்ய ராகுல்காந்தி வலியுறுத்தல்
இந்நிலையில் தான் அசாம் மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகளை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ள வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். அதேநேரத்தில் அசாம் மாநில வெள்ள பாதிப்பில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாஜக பாராமுகம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பியும், அக்கட்சியின் லோக்சபா துணை தலைவருமான கவ்ராவ் கோகாய், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‛‛ஒரு நெருக்கடி நிலையாக அசாமில் வெள்ளப்பாதிப்பு உள்ளது. ஆனால் பாஜக அரசு பாராமுகம் காட்டுகிறது'' என கூறினார்.
ஆட்சி அதிகாரம் மட்டுமே
மேலும், ‛‛பிரதமர் நரேந்திர மோடி அசாமுக்கு வந்து வெள்ளப்பாதிப்பை பார்த்து சிறப்பு நிதி வழங்க வேண்டும். ஆனால் அவர் மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்ப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஆட்சி, அதிகாரத்தை பிடிப்பது மட்டுமே பாஜகவுக்கு எல்லாமுமாக உள்ளது. மக்கள் துயரங்களை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு சான்று'' என்றார்.
அசாமில் சிவசேனா எம்எல்ஏக்கள்
இதற்கிடையே தான் மகாராஷ்டிரா சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர். அவர்களை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வரவேற்றார். மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களை அவர் சந்தித்து பேசியிருந்தார். இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது.
54 லட்சம் மக்கள் புறக்கணிப்பு
இதுபற்றி அசாம் காங்கிரஸ் தலைவர் பூபென் போரா கூறுகையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 54 லட்சம் மக்களை புறக்கணித்துவிட்டு, மகாராஷ்டிராவின் எம்எல்ஏக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் அசாம் முதல்வர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் மழை வெள்ள பாதிப்பால் மத்திய அரசிடம் இருந்து அவர் உரிய நிவாரண நிதி பெற தவறிவிட்டார். கவுஹாத்தி நகரில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழலில் முதல்வர் இன்னொரு மாநில எம்எல்ஏக்களுடன் அரசியல் செய்கிறார். இது மக்களுக்கு செய்யும் அவமானமாகும்'' என விமர்சனம் செய்திருந்தார்.