140 பேரை பலி கொண்ட விபத்து: பிரதமர் மோடி வந்த போது பெயரை மறைத்த கொலைகார குஜராத் நிறுவனம்!
மோர்பி: குஜராத்தின் மோர்பி மச்சு ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் அறுந்து விழுந்து 140 பேர் மரணம் அடைந்தனர். இந்த துயரம் நிகழ்ந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட சென்ற போது கேபிள் பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனம் தமது பெயர் பலகைகளை மூடி மறைத்திருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது.
குஜராத்தின் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 500க்கும் மேற்பட்டோர் ஆற்றுக்குள் மூழ்கினர். இவர்களில் 140 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய சுமார் 400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குஜராத்தை பெருந்துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது இச்சம்பவம்.

புனரமைப்பு பணி
மோர்பி கேபிள் பாலம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை புனரமைக்க குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்தது. ஆனால் புனரமைப்பு பணிகள் முடிந்து உரிய சான்றுகள் பெறாமலேயே குஜராத் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கேபிள் பாலம் திறந்துவிடப்பட்டது.

140 பேர் பலி
இதனால் முழுமையாக புனரமைக்கப்படாத கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில்தான் 140 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்திருப்பது குஜராத் மாநிலத்தில் ஆறாத துயரமாகிவிட்டது. அதேநேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்த போதும் தமது நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரத்து செய்யாமல் பங்கேற்றார். இதுவும் சர்ச்சையானது.

பிரதமர் மோடி விசிட்
இந்நிலையில் கேபிள் பாலம் விபத்து நிகழ்விடத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். இன்று காலை முதலே பிரதமரின் இந்த பயணத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே Go Back Modi கோஷம் வலுத்தது. குஜராத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இந்த துயரத்தை அம்மாநில மக்களால தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கட்டுமான நிறுவனத்தால் சர்ச்சை
இதனிடையே மோர்பி கேபிள் பாலம் விபத்து நடந்த பகுதியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். பிரதமர் மோடி வருகையின் போது சில இடங்களில் பெரும் பதாகைகள் மூடப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஊடக நிறுவனங்கள் விசாரணை நடத்திய போது, 140 பேரை பலி கொண்ட கட்டுமான நிறுவனம்தான் தமது பெயர் பலகைகளை அப்படி மூடி மறைத்திருக்கிறது என தெரியவந்தது. இப்போது குஜராத் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அந்த கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான குரல்கள் வலுக்க தொடங்கி உள்ளன.

மோடி தலைமையில் ஆய்வு கூட்டம்
மோர்பியில் பால விபத்தை அடுத்து அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவர்கள் அனைத்து உதவிகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மீட்பு பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பங்கேற்றவர்கள் யார்?
விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் கண்டறிய பரந்த மற்றும் விரிவான விசாரணை தற்போதைய உடனடித் தேவை எனவும் பிரதமர் கூறினார். விசாரணையின் முடிவில் கிடைக்கும் முக்கிய தகவல்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சாங்க்வி, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா, குஜராத் மாநில அரசின் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கேபிள் பால விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள்ளூர் மருத்துவமனைக்கும் பிரதமர் மோடி சென்றார். மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் அவர்களது துணிச்சல் மற்றும் சேவையைப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications