தாய் மறைவின் போதும் கூட.. தளராத பிரதமர் மோடி.. காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார்
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் இன்று அதிகாலை காலமான நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படாது என்று தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளன. மட்டுமல்லாது பிரதமர் காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடியின் தயார் ஹீராபென் கடந்த காலங்களில் நல்ல உடல் நலத்துடன் இருந்து வந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட தொடங்கிய காலத்தில் பெரும் வதந்திகள் பரவின. ஆனால் இவர் தானாக முன் வந்து இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதன் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்டார்.
இவ்வாறு இருக்கையில் குஜராத்திற்கு மோடி ஒவ்வொருமுறை செல்லும் போதும் தனது தாயை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் (டிச.27) ஹீராபென்-க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதய நோய்க்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது.

காலமானார்
ஆனால் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது மோடியின் குடும்பத்தினர் மத்தியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயாரின் மறைவு குறித்து "ஒரு புகழ்பெற்ற 100 ஆண்டு சகாப்தம் இறைவனின் பாதங்களில் இளைப்பாறுகிறது" என்று மோடி கூறியுள்ளார். அதேபோல அவரது 100வது பிறந்த தினத்தில் தன்னிடம் அவர் கூறியதையும் நினைவு கூர்ந்திருக்கிறார். அதாவது, "வேலையை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். வாழ்க்கையை தூய்மையுடன் வாழ வேண்டும்" என்று தனது தாயார் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரங்கல்
ஹீராபென்னின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், ராகுல் காந்தி, அமித்ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது உடல் காலை 9.30 மணியளவில் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக வீட்டிலிருந்து அவரது உடலை மோடி சுமந்து சென்றார். இந்த துயர சம்பவத்தையடுத்து இன்று அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சொல்லப்பட்டது. மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையையும், அதேபோல ரூ.7,800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் மோடி இன்று தொடங்கி வைக்க இருந்தார்.

காணொலி
இந்த ரயில் கொல்கத்தாவிலிருந்து ஜல்பைகுரி வரை வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும். அதே போல கொல்கத்தாவின் ஊதா மெட்ரோ பாதையையும் திறந்து வைக்க இருந்தார். இதனையடுத்து மேலும் பல திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு இறுதியாக கங்கா கவுன்சிலின் 2வது கூட்டத்தில் பங்கேற்பதுதான் பிரதமர் மோடியின் இன்றைய திட்டம். ஆனால் அவரது தாய் மறைவையடுத்து இந்த திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த திட்டங்களை காணொலி வாயிலாக அவர் தொடக்கி வைப்பார் என்று பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்திருந்தது.

மன்னிப்பு
இதனையடுத்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டங்களை தொடக்கி வைத்தார். இதில் பங்கேற்றிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, "இன்று உங்களுக்கு சோகமான நாள். தாயார் ஹீராபென் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நீங்கள் தொடர்ந்து இயங்க கடவுள் உங்களுக்கு வலிமை அளிக்கட்டும்" என்று தனது இரங்கலை தெரிவித்தார். திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர், "நான் மேற்கு வங்கத்திற்கு வர இருந்தேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட காரணத்தினால் வர முடியவில்லை. இதற்காக மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

புதிய பயணம்
மேலும், "இந்திய ரயில்வேதுறையை நவீனப்படுத்தி மத்திய அரசு சாதனை படைத்து வருகிறது. தற்போது இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. நவீனமயத்தின் புதிய பயணத்தை இந்திய ரயில்வே தொடங்கி இருப்பதை அடுத்த 8 ஆண்டுகளில் நாம் பார்ப்போம்" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications