அலோபதி மருத்துவம் குறித்து அவதூறு.. ராம்தேவ் மீது வழக்குப்பதிவு.. விசாரணையை துவங்கிய போலீசார்!
ராய்ப்பூர்: அலோபதி மருத்துவ முறையை அவதூறாக பேசியதாக பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று இந்த அளவுக்கு குறைந்துள்ளது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் டாக்டர்கள்தான். அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளும் கொரோனாவுக்கு எதிராக வினை புரிந்தன.
ஆனால் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் நவீன மருத்துவ முறைகளை கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.

பகீர் கருத்துக்கள்
''நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. அலோபதி மருந்துகளை உட்கொண்டு பலர் உயிரிழந்து விட்டனர். ரெமிடிசிவர் என இந்திய மருந்து கட்டுப்பாடு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் ஒன்று கூட வேலை செய்யவில்லை' என்று பகீர் கருத்துக்களை கூறி இருந்தார் ராம் தேவ்.

இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்
இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடமும் வலியுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து அலோபதி மருத்துவ முறையை பாராட்டி பல்டி அடித்தார் பாபா ராமதேவ். இந்த நிலையில் அலோபதி குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக பாபா ராமதேவ் மீது சத்தீஷ்கர் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசில் புகார்
இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) சத்தீஸ்கரின் பிரிவு மருத்துவர்கள் பலர், ''கடந்த ஒரு வருடமாக, ராம்தேவ் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் பிற முன்னணி அமைப்புகளால் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எதிராக தவறான தகவல்களையும், அறிக்கைகளையும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்.

வழக்குப்பதிவு செய்தனர்
நவீன மருத்துவ வசதிகள் மற்றும் அலோபதி மருந்துகள் 90% நோயாளிகளை குணப்படுத்துகின்றன. ராம்தேவ் மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்கிறார். மாநில அரசின் சட்ட விதிகளை மீறி விட்டார்'' என்று ராய்ப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை ஏற்று ராம்தேவ் மீது உயிருக்கு ஆபத்தான வகையில் நோய்த்தொற்று எற்படும் வகையில் செயல்படுதல், அரசால் முறையாக அறிவிக்கப்பட்ட சட்டத்தை களங்கப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக ராய்ப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அஜய் யாதவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications