சிரியாவுக்குள் ஊடுருவ முயன்று நாடு கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 7 பேர் உள்பட 9 பேரும் விடுவிப்பு!
பெங்களூரு: துருக்கி வழியாக சிரியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட 9 பேரிடம் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், தீவிரவாதிகளுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்படாததால் விடுதலை செய்துள்ளனர்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 9 பேர் சுற்றுலா விசா மூலம், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்து, சிரியாவுக்குள் ஊடுருவ முற்பட்டபோது, துருக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு, உடனடியாக நாடு கடத்தப்பட்டனர். பெங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்த அவர்களை பெங்களூரு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பிடித்து விசாரித்து வந்தனர்.
பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் கோயல் இதுகுறித்து கூறுகையில், "சென்னையை சேர்ந்த மகமது அப்துல் அஹத் (46), அவரது மனைவி, 5 பிள்ளைகள், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித் பாஷா (24), கர்நாடக மாநிலம் ஹாசன் நகரை சேர்ந்த இப்ராஹிம் நவ்பால் (24) ஆகியோர், கடந்த மாதம் 24ம் தேதி இஸ்தான்புல் சென்றுள்ளனர். அங்கு எல்லை தாண்டிச் செல்ல முயன்றதால் 30ம்தேதி பெங்களூருக்கு அனுப்பப்பட்டனர்.
முகமது அப்துல் அஹத், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், அமெரிக்காவின் கென்னடி-மேற்கு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் பட்டம் பெற்றவர். 10 வருடங்களுக்கும் மேலாக, அமெரிக்காவில் பணியாற்றியவர். ஜாவீத் நவ்பால் இன்ஜினியரிங் படித்தவர். சிரியாவுக்குள் செல்ல முயன்ற காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து வந்தது. இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதற்கான ஆதாரம் இல்லாததால் விடுவித்துள்ளோம்" என்றார்.