இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஜே.என்.யூ மாணவர்கள்... 5 மாநிலங்களில் அதிரடி தேடுதல் வேட்டை
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யூ) இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய மாணவர்களைத் தேடி டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் பயங்கரவாதி அப்சல் குரு 2013-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி தூக்கிலிடப்பட்டான். ஆனால் அப்சல்குருவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 9-ந் தேதியன்று ஜே.என்.யூ. வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் டெல்லி மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய மாணவர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்யும் வகையில் டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இன்று டெல்லி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனிடையே மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதாக சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு அம் மாநில அரசை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.