பிரதமர் மோடி தொடர்பான புகார்.. 6 ஆண்டுகளுக்கு முன் கொடுத்ததாம்.. திடீரென ஆக்ஷனில் குதித்த போலீஸ்!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடர்பாக சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகாரில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பிரதமராகக் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோடி உள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 2016இல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அப்போது சமாஜ்வாடி கட்சியில் இருந்து ஷம்சுல் ஹசன் பல்லி என்பவர் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் போலீசார் இப்போது 6 வருடங்களுக்குப் பின் முக்கிய நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
சர்தார் படேல்.. நேதாஜி.. இன்று ”பகத்சிங்” - மோடி அறிவிப்பை “வரவேற்று” கொள்கையை வகுப்பெடுத்த முரசொலி
நிகழ்ச்சி
கடந்த 2016ஆம் ஆண்டில், அகில இந்திய மில்லி கவுன்சில் (AIMC) தனது முதல் மாநாட்டை மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடத்தியது. இந்தியா முழுவதிலும் இருந்து இஸ்லாமிய மதகுருமார்கள் உட்பட 300 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். மாநாட்டிற்குப் பிறகு, 'நீதி, அமைதி மற்றும் பொறுப்புகள்' என்ற தலைப்பில் 2016 அக்டோபர் 29இல் இக்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.
புகார்
அந்தக் கூட்டத்தில் இப்போது காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் ஆரிப் மசூத் பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போது சமாஜ்வாடி கட்சியில் இருந்து ஷம்சுல் ஹசன் பல்லி என்பவர் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் இதுவரை போலீஸ் நடவடிக்கை எடுக்காமலேயே இருந்தது. தற்போது சனுக்தா சங்கர்ஷ் மோர்ச்சா என்ற அமைப்பின் மாநிலத் தலைவராக இருக்கும் ஷம்சுல் ஹசன் பல்லி, காங். தலைவரின் பேச்சு தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசாருக்கு அனுப்பி இருந்தார்.
6 ஆண்டுகளுக்குப் பின்னர்
இதனிடையே சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் அளித்த புகார் தொடர்பான வாக்குமூலத்தைப் பெற ஷம்சுல் ஹசனை மத்தியப் பிரதேச போலீசார் அழைத்துள்ளனர். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எங்கள் பிரதமரை மேடையில் இருந்து அசிங்கப்படுத்தினார். நமது நாட்டில் அரசியலமைப்பை விட பெரியது எதுவும் இல்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். அவரை அவமதிக்கும் வகையிலான அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
இது தொடர்பாகவே நான் புகார் அனுப்பி இருந்தேன். அந்த நேரத்தில் கவர்னர், டிஜிபி முதல்வர், உள்துறை அமைச்சர் என அனைவருக்கும் நான் புகார் அனுப்பினேன். ஆனால், இதில் நடவடிக்கை எடுக்க ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதாவது நடவடிக்கை எடுத்து உள்ளனரே. அதுவே எனக்குச் சந்தோஷம் தான்" என்று அவர் தெரிவித்து உள்ளார்.
என்ன காரணம்
இந்த 6 ஆண்டுகள் காலதாமதம் ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்து உள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, "இது ஒரு நிர்வாகச் செயல்பாடு. சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கொஞ்சக் காலம் ஆகவே செய்யும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக அலட்சியமாக இருந்துவிட முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ்
அதேநேரம் இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் சாடியுள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் கூறுகையில், "மேடையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், ஆனால் ஆரிப் மசூத் காங்கிரஸின் எம்எல்ஏவாக இருப்பதால் அவர் குறிவைக்கப்படுகிறார். இது எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கும் வழி. 2018 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. இந்த பழிவாங்கும் கொள்கை தொடர்ந்தால், அவர்கள் மீண்டும் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.