போலியோ சொட்டு மருந்தில் வைரஸ் கண்டுபிடிப்பு.. தீயாய் பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்
Recommended Video
டெல்லி: போலியோ சொட்டு மருந்து உட்கொள்ள கூடாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
போலியோ நோய் தாக்குதலை முறியடிக்கும் வகையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாடு முழுக்க ஆண்டுக்கு இருமுறை, போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது.
அரசின் தீவிர தொடர் நடவடிக்கைகளால், 2011ம் ஆண்டு முதல், போலியோ அற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
[மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க மக்கள் செய்ய வேண்டியது என்ன? மின்வாரியம் டிப்ஸ்!!]
மூன்று மாநிலங்கள்
இந்நிலையில், தெலுங்கானா, மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ மருந்தில், வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் இயங்கிவரும் `பயோமேட்' என்ற பெயரிலான, போலியோ சொட்டுமருந்து நிறுவனத்தை மூடி, சுகாதாரத்துறை அமைச்சகம் சீல் வைத்துள்ளது. மேலும் அதன் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டார்.
குழந்தைகள் உடல் நலம்
3 மாநிலங்களிலும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைகளின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விரிவான, விசாரணை நடைபெற்றுவருகிறது. இம்மூன்று மாநிலங்களிலும், 1.5 லட்சம் மருந்துகள் வினியோகிக்கப்பட்டு அதில் 3ல் இரண்டு பங்கு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து மருந்து மீது புகார் வந்ததால் எஞ்சிய மூன்றில் ஒரு மடங்கு மருந்துகளையும் அரசு வாபஸ் பெற்றுள்ளது.
வாட்ஸ்அப் வதந்தி
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், போலியோ சொட்டு மருந்துகளை இனிமேல் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்ற பீதியூட்டும் பிரச்சாரங்கள் ஆரம்பித்துவிட்டன. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மூடப்பட்ட பயோமேட் நிறுவனத்தால் வினியோகிக்கப்பட்ட சொட்டுமருந்துகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும் எனவே யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் வழங்கலாம்
குழந்தைகளுக்கு வழக்கம்போல போலியோ சொட்டு மருந்துகளை வழங்கி, இளம் பிள்ளை வாதத்திற்கு எதிராக கைகோர்க்குமாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது. "வருங்காலங்களில் போலியோ தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்" என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.