உக்ரைன் போரை வைத்தும் அரசியல் செய்கிறார்கள்.. பிரச்சாரத்தில் காங்கிஸை தாக்கிய பிரதமர் மோடி
வாரணாசி: ‛‛உக்ரைன் விவகாரத்திலும் எதிர்க்கட்சியினர் அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றனர்'' என காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சி தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி தாக்கி பேசினார்.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
இங்குள்ள அசம்கார், மாவ், ஜான்பூர், காசிப்பூர், சந்தாலி, வாரணாசி, பதோகி, மிர்சாபூர், சோன்பத்ரா ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதமர் தொகுதி
இந்த கடைசி கட்ட தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் முக்கியமானதாகும். ஏனென்றால் அவர் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் தனது தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள் அனைத்திலும் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டிய கூடுதல் பொறுப்பு நரேந்திர மோடியிடம் உள்ளது. இந்நிலையில் தான் பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று பிரதமர் நரேந்திரமோடி வாரணாசி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளை தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:

அரசியல் லாபம்
நாடு நெருக்கடியான நேரத்தில் இருக்கும்போதும் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். நெருக்கடி ஏற்படும் போது குறைகளை மறந்து அனைவரும் ஒன்றுபடுவது தான் ஒவ்வொரு நாட்டுக்கும் பலமானதாக இருக்கும். ஆனால் குடும்ப அரசியலை முன்னெடுக்கும் நபர்கள் அனைத்து விஷயங்களிலும் அரசியல் லாபம் தேடுகின்றனர்.

கண்மூடித்தனமான எதிர்ப்பு
இந்திய மக்களும், இராணுவமும் நெருக்கடியில் இருக்கும்போது அதில் உள்ள சிக்கல்களை தீர்க்க இவர்கள் கைகோர்ப்பது இல்லை. மாறாக குழப்பம் செய்து வருகின்றனர். இதை கொரோனா பரவலின்போது பார்த்தோம். தற்போது உக்ரைனில் இந்தியர்கள் தவிக்கும் சூழலிலும் பார்க்கிறோம். அனைத்து விஷயங்களையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதை எதிர்க்கட்சிகளின் சித்தாந்தமாக மாறிவிட்டது.

வாய்ப்புகளாக மாற்ற
உத்தரபிரதேசத்தில் இரட்டை இன்ஜின் பாஜக ஆட்சியை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் கவர்ச்சி அறிவிப்புகளை தள்ளிவையுங்கள். அவற்றை ஒருபோதும் அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். 21ம் நூற்றாண்டானது உலகிற்கு புதிய சவால்களையும், நெருக்கடிகளையும் கொண்டு வந்துள்ளது. இதை சந்தித்து வாய்ப்புகளாக மாற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானம் எனக்கு மட்டுமல்ல 130 கோடி மக்களுக்கும் சொந்தமானது.

வாக்களியுங்கள்
தூய்மை இந்திய திட்டத்தில் 10 கோடிக்கும் அதிக கழிவறைகள் கட்டியுள்ளளோம். கிராமத்தில் ஏழை, தலித் மக்கள் பயனடைந்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் யோகா, ஆயுர்வேதம் குறித்த விஷயங்கள் பரவியுள்ளது. ஆனால் காங்கிரஸ் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒரு காலத்தில் காங்கிரஸின் அடையாளமாக இருந்த கதரை அவர்கள் மறந்துவிட்டனர். ரவுடிகள், மாபியாக்கள், ஊழல்வாதிகள், வாரிசு அரசியல் செய்வோரை முற்றிலுமாக நீங்கள் நிராகரிக்க வேண்டும். நாட்டின் நலனைப் பார்த்து வாக்களிக்க வேண்டுகிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications