போப் மறைவு.. 3 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு.. இழப்பை தாங்காமல் தமிழக அரசு கூறிய செய்தி
புதுடெல்லி: போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் நேற்று காலமானார். சில காலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவையொட்டி நம் நாட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் 2 நாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் போப் பிரான்சிஸ் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அந்த பொறுப்பை ஏற்றார். கடந்த 12 ஆண்டுகளாக அவர் அந்த பொறுப்பை வகித்து வந்தார். வாடிகன் நகரில் அவர் வசித்து வந்தார்.

போப் பிரான்சிஸ்கு 88 வயது ஆனது. முதுமை காரணமாக அவர் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சுவாச பிரச்சனையால் அவர் கடந்த பிப்ரவரி மாதம் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
போப் பிரான்சிற்கு நிமோனியா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை பெற்றார். அதன்பிறகு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று அவர் வாடிகன் நகருக்கு திரும்பினார். பொதுவாக புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட நாட்களில் வாடிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் பங்கேற்று மக்களுக்கு வாழ்த்து செய்தி மற்றும் உரையாற்றுவார்.
ஆனால் கடந்த வியாழக்கிழமையில் வந்த பெரிய வியாழன், வெள்ளிக்கிழமை வந்த புனித வெள்ளி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட ஈஸ்டர் உள்ளிட்ட கிறிஸ்தவர்களின் முக்கியமான நாட்களில் அவர் பங்கேற்கவில்லை. வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. இது அவரது உடல்நலம் மீது கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில் தான் நேற்றைய தினம் அவரது உடல்நலம் மோசமாகி உள்ளது. டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் காலமானார். போப் பிரான்சிஸின் மரணத்தை கர்தினால் (கார்டினல்) கெவின் பாரெல் அறிவித்தார். ஈஸ்டர் தினத்துக்கு அடுத்த நாளில் போப் பிரான்சிஸ் காலமாகி உள்ளார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு கிறிஸ்தவ மக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உருவப்படத்திற்கு பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். போப் பிரான்சிஸ் மறைவையொட்டி கத்தோலிக்க திருச்சபையில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
அதேபோல் போப் பிரான்சிஸின் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் தினம் அனுசரிக்கப்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் நம் நாட்டில் துக்க தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதன்பிறகு போப் பிரான்சிஸின் இறுதி சடங்கும் நடக்கும் நாளில் இன்னொரு துக்க தினம் அனுசரிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அதேபோல் தமிழக அரசு சார்பில், ‛‛போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இன்றும், நாளையும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். துக்க தினத்தையொட்டி தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications