தாத்ரி சம்பவத்திற்கு பிறகு பிசாதா கிராமத்து இந்துக்கள் செய்த நல்ல காரியம்
தாத்ரி: உத்தர பிரதேசத்தில் அக்லாக்கை அடித்துக் கொன்ற பிசாதா கிராமத்தினர் முஸ்லீம் பெண்கள் இருவரின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரியைச் சேர்ந்த முகமது அக்லாக்(50) தனது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததுடன் சமைத்து சாப்பிட்டதாகக் கூறி அவரை பிசாதா கிராமத்தினர் அடித்துக் கொலை செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பிசாதா கிராமத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தனது இரண்டு மகள்களின் திருமணத்தை வேறு ஏதாவது ஊரில் நடத்தலாம் என்று திட்டமிட்டார். இந்த பதட்டமான சூழலில் இந்துக்கள் தனது மகள்களின் திருமணத்தை சுமூகமாக நடத்தவிட மாட்டார்கள் என்று அஞ்சினார். ஆனால் அவரே ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பிசாதா கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஹக்கீம் மகள்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். டெண்ட் அமைப்பதில் இருந்து உணவு தயாரிப்பது வரை அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டு செய்துள்ளனர்.
இந்து சகோதரர்களின் இந்த செயலால் ஹக்கீம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.