பிரசாந்த் கிஷோர்.. சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே? மாயாஜால 'பிகே..' டிராக் ரெக்கார்ட் இதுதான்!
டெல்லி: பெரிய பேக்ரவுண்ட் இல்லை, மக்கள் செல்வாக்கு இல்லை, சீரான டிராக் ரெக்கார்டும் இல்லை ஆனாலும், நாட்டின் சக்தி வாய்ந்த நபர்களில் இவரும் ஒருவர். இந்த கலையில்தான் அவர் கை தேர்ந்தவர். அவர் வேறு யாருமல்ல, ipac அமைப்பின், பிரசாந்த் கிஷோர்தான். ஒரு நல்ல சேல்ஸ்மேன் போல, இவர் 'சந்தைப்படுத்துவது' எல்லாமே விற்பனையாகும் பொருட்களைத்தான்.
வெற்றி பெறும் அணியில் இடம்பிடிக்கும், பிரசாந்த் கிஷோர்தான் கொடுக்கும் பினிஷ் டச்கள்தான் இத்தனை புகழுக்கும் காரணம். வெற்றியை சிக்சருடன் கொண்டுவருவாரே, தோனி.. அதுபோல, அரசியலில் பிரசாந்த் கிஷோர்.
ஆனால் இவர் ஒப்பந்தம் செய்த அனைத்து ப்ராஜக்டும் ஹிட்டா என்றால் இல்லை. வெற்றி பெறும் அணியில் இவரது பெயர் அடிபடுமே தவிர, தோற்கும் அணியில் இவர் இருந்த தடமே வரலாற்று பக்கங்களில் எளிதாக மறந்துவிடும்.

அமெரிக்கா ரிட்டர்ன்
யார் கண்டார்? இதுவும் பிரசாந்த் கிஷோரின் ஸ்டேட்டர்ஜியாக இருக்கலாம். யார் இந்த பிரசாந்த் கிஷோர்? எதற்காக இத்தனை டிமாண்ட், ஏன் இவரது எதிரணியினருக்கு இவரை கண்டால் நடுக்கம்? இதோ பார்க்கலாம் வாங்க: பொதுச் சுகாதார துறையின் நிபுணராகத்தான் முதலில் அறியப்பட்டார், பிரசாந்த் கிஷோர். அமெரிக்காவில் கை நிறைய சம்பளத்தோடு வேலையும் பார்த்து வந்தார். "கடைசியில் என்னையும் அரசியல்வாதியாக்கிட்டீங்களே" என முதல்வன் படத்தில் அர்ஜுன் பேசும் டயலாக்கை இவர் பேசியது 2011ல். குஜராத் முதல்வராக இருந்த மோடியை இவர் சந்திக்க நேரிட்டது அப்போதுதான். அப்போது முதலே மோடியின் வலதுகரமாக மாறினார். ஆனால் இவர் பெயர் பட்டொளி வீசி பறக்க தொடங்கியது, 2014 லோக்சபா தேர்தலில்தான்.

2014 தேர்தல் இலக்கணம்
கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டை பற்றி சொல்லும்போது, இவர் இலக்கணம் மாறாமல் ஆடக்கூடியவர்.. அதாவது, டெக்ஸ்ட் புக் பிளேயர் என்பார்கள். அப்படித்தான், தேர்தல் அரசியல் வெற்றியில், இப்படியான சாமுத்ரிகா லட்சணமும் பொருந்திய தேர்தல் வெற்றி என்றால் அது 2014 லோக்சபா தேர்தல்தான். நீ..ண்ட காலத்திற்கு பிறகு, தனிப் பெரும்பான்மையோடு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த தேர்தல். எதிரணி சின்னா பின்னமாகி எழுந்திருக்க (இன்னமும்) முடியாமல் தடுமாறிய தேர்தல். அப்போதுதான், பிரசாந்த் கிஷோர் பெயரும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. ஏனெனில் பாஜகவின் தேர்தல் ஆலோசகராக அப்போது இருந்தது சாட்சாத் பிரசாந்த் கிஷோர்தான்.

அனைத்து கட்சிகளும்
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பார்கள். அது, பிரசாந்த் கிஷோர்தான் பக்காவாக பொருந்தும். மோடியயை கைவிட்டு பிறகு, அவரது அரசியல் எதிரிகளுக்கும் ஆலோசகராக இருந்தார், பிரசாந்த் கிஷோர் என அழைக்கப்படும் பிகே. மமதா பானர்ஜி, பஞ்சாப்பில் அமரிந்தர் சிங், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் என இவர் அரசியல் பயணம், கன்னித்தீவு போல நீளமானது.

மேஜிக்
பிரசாந்த் கிஷோர் பல வெற்றிக் கனிகளை பறித்திருக்கிறார். 2014 ல் மோடி, 2015 ல் பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி, 2017 ல் அமரீந்தர் சிங் மற்றும் 2019ல் ஆந்திராவின் ஜெகன் ரெட்டி வரை அவர் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. ஆனால், இதில், கேட்கப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால், இந்த வெற்றிகளை பிகே காலடியில் சமர்ப்பிக்க முடியுமா? என்பதுதான். பிகே மேஜிக் வேலை செய்யாத இடங்களும் இருக்கிறதே.

பிகே இல்லாவிட்டாலும்
2014 ஆம் ஆண்டில் மோடி ஒரு புத்திசாலித்தனமான பிரச்சாரத்தை நடத்தினார், வாக்காளர்கள் ஒரு மாற்றத்திற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆளும் காங்கிரஸ் கூட்டணி, பல்வேறு, அடுக்கடுக்கான, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டு இருந்தது. கிஷோர் கடுமையாக உழைத்தார், இல்லை என சொல்லவில்லை. ஆனால் அந்த தேர்தலில், பிகே இல்லாமல், மோடி வெற்றி பெற்றிருக்க மாட்டார் என யாராவது சொல்ல முடியுமா? யார் இல்லாவிட்டாலும் அப்போது மோடிதான் ஜெயித்திருப்பார்.

பாஜக வெற்றிகள்
நம்ப முடியவில்லையா? கிஷோர் இல்லாமல்தான் உத்தரபிரதேசம், அசாம், திரிபுரா போன்ற பல கடினமான மாநிலங்களில் பாஜக அடுத்தடுத்து வென்றது. மிக முக்கியமாக, ஐந்தாண்டு பதவியில் இருந்த போதிலும், 2019 மக்களவைத் தேர்தலில் மோடி பிகே இல்லாமல், முன்பைவிட பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2017 உத்தரபிரதேச தேர்தலில், கிஷோர் இல்லாமல் பாஜக வெற்றி பெற்றது மட்டுமல்ல, உண்மையில் கிஷோர் அணிக்கு எதிராக வென்றது. ஏனெனில் அப்போது காங்கிரசுக்காக பணியாற்றினார் பிகே. ஷீலா தீட்சித்தை முதல்வர் முகமாக அறிவிப்பதில் இருந்து ராகுல் காந்தியை பிரச்சாரத்திற்கு அதிகமாகப் பயன்படுத்துவது வரை பிகே எடுத்த முயற்சிகள் அனைத்தும் கானல் நீராக மாறின.

வெற்றி பெறும் குதிரைகள்
அதேநேரம், வெற்றிக்குதிரையான அமரீந்தர் சிங்கை பஞ்சாப்பில் வெற்றிபெற வைத்தார் பிகே. ஏனெனில், அங்கு பிகே இல்லாமலும் அமரீந்தர் சிங்தான் வெற்றி பெற்றிருப்பார். அதுதான் பஞ்சாப் சூழ்நிலை. பிகே இப்போது கவனமாக ஜெயிக்கும் குதிரைகள் மீது பணத்தை கட்டும் வித்தையை கையாளுகிறார். ஜெகன், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் மற்றும் இப்போது திமுக. கிஷோர் இப்போது தனது அரசியல் கட்சி தலைவர்களை பிரபலப்படுத்துவதைவிட, தன்னை எப்படி பிரபலப்படுத்துவது என்ற கலையில் தேர்ந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications