காவிரி தீர்ப்பு: தமிழகத்திற்கு பாதகம் மட்டுமல்ல சாதகங்களும் இருக்கு!
Recommended Video

டெல்லி: காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
இந்த தீர்ப்பில், தமிழகத்திற்கு பல பாதகமான அம்சங்களும், சில சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
முதலில் பாதகங்கள் என்னவென்று பார்க்கலாம்.

முன் உதாரணம்
கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரில் பெங்களூருக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவு. வருங்காலங்களில் பெங்களூரின் நீர் தேவையை உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்ய இந்த தீர்ப்பு முன் உதாரணமாகிவிடும்.

நம்ப முடியாதே
தமிழகத்திலுள்ள 20 டிஎம்சி அளவுக்கான நிலத்தடி நீரை கருத்தில் எடுக்குமாறு உத்தரவு. நிலத்தடி நீர் மழை அளவை பொறுத்து மாறும் என்பதால் தமிழகத்திற்கு இது பின்னடைவு.

மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளதால், மத்திய அரசு அதற்கு முன்வரப்போவதில்லை. பாஜக, காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளும் கர்நாடகாவில் மட்டுமே செல்வாக்கோடு இருப்பவை என்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைவது கானல் நீராகிவிட்டது.

மேல்முறையீடு இல்லை
காவிரி விவகாரத்தில் இனிமேல் மேல்முறையீடு செய்ய முடியாது. 15 வருடங்களுக்கு இந்த தீர்ப்புதான் அமலில் இருக்கும். பிறகுதான் மாற்றம் செய்ய கோர முடியும். சீராய்வு மனுவை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

சாதகங்கள்
இனிமேல் சாதகங்கள் என்ன என்று பார்க்கலாம். சுதந்திரத்திற்கு முன்பு 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் மதராஸ் மற்றும் மைசூர் மாகாணங்கள் நடுவே காவிரி பங்கீடு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனியும் செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தபடி பார்த்தால், தமிழக அனுமதியின்றி கர்நாடகாவால் புதிய அணைகளை கட்ட முடியாது. இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய கர்நாடகா கோரியிருந்தது.

மேகதாது அணை
மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயல்கிறது. ஆனால் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவை என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம்.

நதிகள் தேசியமயம்
நதிகளை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியது. காவிரி தங்கள் சொத்து என கர்நாடகா கூறிவரும் நிலையில், இந்த தீர்ப்பு அதற்கு பின்னடைவாகும். நதிகளை தேசியமயமாக்க நடைபெறும் முயற்சிகளின்போது இந்த தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.












Click it and Unblock the Notifications