25ம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி வருகிறார் ஒபாமா.. இதுதான் "புரோகிராம்" லிஸ்ட்!
டெல்லி: குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது.
குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் நாளை மறுநாள் இந்தியா வருகிறார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் வருகிறார்கள்.
அவரது சுற்றுப்பயணம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.
பாரம்பரிய முறைப்படி வரவேற்பு:
அதன்படி, ஏர்போர்ஸ்-1 விமானம் மூலம் ஒபாமா 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி வந்து சேருகிறார். பின்னர் அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மகாத்மாவிற்கு அஞ்சலி:
அதன்பிறகு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
பிரதமருடன் சந்திப்பு:
பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஒபாமாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். முதலில் இரு தலைவர்களும் சிறிது நேரம் தனியாக சந்தித்து பேசுவார்கள். அதன்பிறகு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள்.
ஒபாமாவின் இரவு விருந்து:
பேச்சுவார்த்தை முடிந்ததும் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். இரவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை ஒபாமா சந்தித்து பேசுகிறார். அப்போது அவருக்கு குடியரசுத்தலைவர் இரவு விருந்து அளிக்கிறார்.
குடியரசு தினவிழா:
26 ஆம் தேதி காலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அது முடிந்ததும் குடியரசுத்தலைவர் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். பிற்பகலில் பிரதமர் மோடியும், ஒபாமாவும் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்கள்.
நாட்டு மக்களுக்கு உரை:
27 ஆம் தேதி காலை பிரதமர் மோடியும், ஒபாமாவும் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்கள்.
மனைவியுடன் தாஜ்மஹால் விஜயம்:
அதன்பிறகு ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் டெல்லியில் இருந்து ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிடுகிறார்.
அமெரிக்கா புறப்பாடு:
பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பும் அவர், அன்றே தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
சுற்றுப்பயண ஏற்பாடுகள்:
ஒபாமா இந்தியாவில் இருக்கும் போது, அவரது சுற்றுப்பயணம் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளை மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஷ் கோயல் கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.