சத்தியத்திற்கு பெயர் பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலில் மோடி சாமி தரிசனம்!
மங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா வருகை தந்தார்.
தென்கனரா மற்றும் வட கர்நாடகா மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். முன்னதாக புகழ்பெற்ற தர்மஸ்தலாவிலுள்ள மஞ்சுநாத சுவாமி கோயிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, அனந்த்குமார், மாநில அமைச்சர் யூ.டி.காதர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மைசூர் தலைப்பாகை
மோடிக்கு மைசூர் தலைப்பாகை அணிவித்து அனந்த்குமார் வரவேற்பு அளித்தார். மாலையும் அணிவித்தார். மற்ற பிரமுகர்கள் மோடி அறிவுறுத்தல்படி ஒற்றை ரோஜாப்பூவை மட்டும் அளித்து வரவேற்பு கொடுத்தனர்.
நலத்திட்டங்கள்
பிற்பகல் உஜரேவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, 12 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபே கார்டுகளை வழங்குகிறார். இதை தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
பெங்களூரிலும் நிகழ்ச்சிகள்
பெங்களூருவில் மதியம் 3 மணி அளவில் வேதாந்த பாரதி அமைப்பு சார்பில் நடக்க உள்ள கடவுள் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை பீதரில் கலபுர்கி-பீதர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் மார்க்கத்தை தொடங்கி வைக்கிறார்.
தேர்தல் பயணம்
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மோடி அங்கு பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பது குறிப்பிடத்தக்கது.
தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் சத்திய பிரமாணம் செய்வதற்கு புகழ் பெற்றது. இக்கோயிலில் சத்தியம் செய்துவிட்டு அதை மீற முடியாது என்பது கர்நாடக மக்களின் நம்பிக்கை. எனவே தீர்க்க முடியாத பஞ்சாயத்துகளை இக்கோயிலில் வைத்துதான் தீர்ப்பது மக்களின் வாடிக்கை.