மேற்கு வங்கத்தில்.. ராஜ்பவன் முன்பு ஆடுகளுடன் போராட்டம்.. போலீசுக்கு எதிராக ஆளுநர் ஆவேசம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாரதா என்ற செய்தி இணையதளம் செய்திகளை வெளியிட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள்4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.
ஆடுகளுடன் போராட்டம்
இதனை தொடர்ந்து திரிணாமுல் கட்சியை சேர்ந்தவர்கள் , முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ அலுவலம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். மேலும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் இருக்கும் கவர்னர் மாளிகை(ராஜ் பவன்) முன்பும் திரிணாமுல் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை இப்படி இருக்க நேற்று ராஜ் பவனின் வடக்கு வாசல் முன்பு நகரிக் மஞ்சா என்ற அமைப்பு சார்பில் ஒருவர் ஏராளமான ஆடுகளை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் தடுக்கவில்லை
அங்கு ஏராளமான போலீசார் இருந்தும் அந்த நபரை தடுக்காமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு பிறந்த நாள் ஆகும். போலீசாரின் பொறுப்பற்ற தனத்தை கண்டு பொங்கியெழுந்த அவர் போலீசாரை கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜகதீப் தங்கர், ' தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த போதிலும் ராஜ் பவனின் பிரதான நுழைவு வாயிலில் கூட சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை காவல்துறையினரின் நிலைப்பாடு கவலையடையச் செய்கிறது' என்று ஜகதீப் தங்கர் ட்வீட் செய்துள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை இத்துடன் இணைத்துள்ளார் ஆளுநர்.
போஸ் கொடுத்தார்
இது தவிர இந்த ஆளுநர் ஜகதீப் தங்கர், கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ' பெரும் எண்ணிக்கையிலான கொல்கத்தா போலீசாருக்கு முன்னால் ராஜ் பவனின் வடக்கு வாசலில் சில குழுவினர் எந்த வித தடையுமின்றி சுமார் 2 மணி நேரமாக போராட்டம் நடத்துகின்றனர். அதே இடத்திற்கு அருகே ஒரு ஆண் நபர் அரை டஜன் ஆடுகளுடன் ராஜ் பவனின் வடக்கு நுழைவாயில் முன்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு போஸ் கொடுத்தார்.
நடவடிக்கை இல்லை
அதே வேளையில் ஊடகக் குழுவினர் போலீஸ்காரர்கள் இதனை பார்த்து ரசித்தபடி இருக்கின்றனர். அந்த நபரை தடுப்பதற்கோ அல்லது அவரை தனிப்பட்ட முறையில் சோதனை செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். இதற்கிடையே நகரிக் மஞ்சா அமைப்பு தங்களுக்கு எந்த அரசியல் கட்சியுடனும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வங்காளத்தில் மோசமான கொரோனா நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தியதாகவும் கூறியுள்ளது.