என்னைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு தண்டனை கொடுங்கள்: பள்ளி மாணவி பரபரப்புப் புகார்
சோனிபேட்: தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்த தன் தந்தைக்கு தக்க தண்டனை வழங்குங்கள் என போலீசில் புகார் அளித்துள்ளார் அரியானா பள்ளி மாணவி ஒருவர்.
அரியானா மாநிலம் சோனிபேட் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த நான்கு மாதத்தில் தன்னை கிராமத்தில் உள்ள வாலிபர்கள் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பள்ளி மாணவியின் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அந்த மாணவி தனது தந்தை மீதும் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது தந்தையும் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், ‘எனது தந்தை கடந்த செப்டம்பர் மாதம் என்னைப் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் பள்ளியில் படிக்க விரும்புகிறேன். ஆனால் எனது தந்தை என்னைப் பாலியல் தொழிலில் தள்ள முயற்சி செய்கிறார். அவருடன் வீட்டில் வசிக்க நான் விரும்பவில்லை. அவருக்கு தண்டனை வழங்கவேண்டும். எனக்கு நீதி வேண்டும்' எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், புகார் அளித்த மாணவி காவல்நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டதால், அவர் அங்குள்ள பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை அடுத்து மாணவியின் தந்தையும் கைது செய்யப் பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில்; எனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. எனது மகள் இப்போது தான் இவ்விவகாரத்தை என்னிடம் கூறினார். எனது கணவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.