பஞ்சாப் முதல்வரின் அமைச்சரவை விரிவாக்கம்.. 15 காங்.எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு
அமிர்தசரஸ்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது அமைச்சரவையில் 15 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இணைத்தார். 15 பேரும் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த நான்கு அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 6 புதுமுகங்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்
பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கேப்டன் அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக சித்து எழுப்பிய கலகக்குரல் கடைசியில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளியது. அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்த காரணத்தால் புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார்.

சரண்ஜித் சிங் சன்னி
இந்நிலையில் புதிய அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது யார் யாரை நீக்குவது என்பது குறித்து காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் நடத்திய மூன்று சுற்று பேச்சுக்கு பின்னர் பிறகு, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் பஞ்சாபின் புதிய அமைச்சரவை சனிக்கிழமை இறுதி செய்யப்பட்டது.

யார் யார் அமைச்சர்கள்
அமைச்சரவையில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது அமைச்சரவையில் 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இணைத்தார். பர்கத் சிங், ராஜ் குமார் வெர்கா, குர்கிரத் சிங் கோட்லி, சங்கத் சிங் கில்ஜியன், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், ரன்தீப் சிங் நபா, ராணா குர்ஜித் சிங் விஜய், இந்தர் சிங்லா, மன்பிரீத் சிங் பாதல், பிரம் மொஹிந்திரா, சுக்பீந்தர் சிங் சர்க்காரியா, ட்ரிப் ராஜிந்தர் சிங் பஜ்வா, அருணா சவுத்ரி , ரசியா சுல்தானா மற்றும் பாரத் பூஷன் ஆசு ஆகிய 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதில் 6 பேர் புதுமுகங்கள் ஆவர்.

சித்து ஆதரவாளர்கள்
அதேநேரம் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த நான்கு அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலை சித்து தலைமையில் சந்திக்க காங்கிரஸ் விரும்புகிறது. பெரும்பலான எம்எல்ஏக்கள் சித்துவிற்கு ஆதரவு தந்ததால் கேப்டன் அம்ரீந்தர் சிங் அமரீந்தர் சிங் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கடும் கோபத்தில் அமரீந்தர் சிங் உள்ளார்.

முடிவெடுக்க முடியாது
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) கூட்டணி அரசின் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் காங்கிரஸ் கட்சியையும் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியையும் கண்டித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஒரு ரப்பர் ஸ்டாம்ப், அவர் சொந்தமாக முடிவுகளை எடுக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications