அரசனை நம்பி புருஷனை கைவிட்ட காங்கிரஸ்.. பஞ்சாபில் தடுமாற்றம் ஏன்?
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வருகிறது ஈசியா வெற்றி பெறலாம் என்று நினைத்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு.. என்னது வெற்றி பெறுவோமா? அது எப்படி ? அப்படி எல்லாம் நடந்துற கூடாதே? என்ற ரீதியில் கோஷ்டி மோதல்கள் நடந்து வருகிறது. வெற்றியை பறிகொடுக்கும் அபாயம் எழுந்துள்ளது. அதேநேரம் பாஜகவிற்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. நவ்ஜோத்சிங் சித்துவின் நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் துணை முதல்வர் பதவிக்காக மல்லுக்கட்டினார் சித்து.
ஆனால் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தரவே முடியாது என்பதில் மாஜி முதல்வர் அமரீந்தர்சிங் உறுதியாக இருந்தார். அதனால் வேறுவழியே இல்லாமல் காங்கிரஸ் மேலிடம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்கப்பட்டார் சித்து.

சித்து தூண்டினார்
அதன்பின்னர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டார் சித்து. அப்போதும் கூட காங். மேலிடம் அமரீந்தர்சிங்க்குக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அமரீந்தர்சிங்குக்கு எதிராக 50 எம்.எல்.ஏக்களை சித்து தூண்டிவிட்டதாக கூறப்படுகிறது. அமரீந்தர் சிங் பதவிக்கு ஆபத்து வந்தது.

முதல்வர் பதவி
இதனால் வேறுவழியே இல்லாமல் அமரீந்தர்சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தனக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்தார் சித்து. ஆனால் பதவி விலகிய அமரீந்தர்சிங், சித்துவை முதல்வராக்க மிக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால் சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். இதற்கிடையே பாகிஸ்தானுடன் உறவு வைத்திருக்கும் தேசவிரோதி சித்து என விமர்சித்தார் அமரீந்தர்சிங். கடைசி வரை சித்துவுக்கு பதவி கிடைக்கவிடாமல் செய்தார் அம்ரீந்தர் சிங்.

அமரீந்தர் சிங் முடிவு
இதனிடையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர்சிங் பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் உலா வருகின்றன. அமைச்சர்கள், அமைச்சர்களின் இலாகாக்கள் ஆகியவை தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவரான சித்துவுடன் ஆலோசனை நடத்தாமல் டெல்லி மேலிடமே அனைத்தையும் தீர்மானித்தது. இதில் ரொம்பவே கடுப்பாகிப் போன சித்து, சமரசம் செய்து கொள்ள முடியாது என மொட்டையாக ஒரு ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

என்ன நடக்கிறது
ஏற்கனவே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சித்துவும் கடுப்பாகி காங்கிரஸ் மாநில தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இருவருமே காங்கிரஸ் மேலிடத்தின் மீதுஅதிருப்தியில் உள்ளனர். அமரீந்தர் சிங், சித்துபேச்சை கேட்டு தன்னை முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்த காரணத்தால் , கடும் கோபம் அடைந்து பாஜகவில் சேர தயாராகி வருகிறாராம்.
Recommended Video

தடுமாறும் காங்கிரஸ்
இன்னொரு புறம் முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் சித்து, கட்சியின் தலைமை பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். கேப்டன் இல்லாத டீம் போல் பஞ்சாப் காங்கிரஸ் மாறி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

சித்துவின் விளையாட்டு
விவசாயிகள் போராட்டம் காரணமாக பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தான் ஜெயிக்கும், அதுவும் எளிதாக ஜெயிக்கும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் என்னது வெற்றி பெறுவோமா? அது எப்படி ? அப்படி எல்லாம் நடந்துற கூடாதே? என்ற ரீதியில் கோஷ்டி மோதல்கள் நடந்துள்ளது. இதனால் தற்போது பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி எளிதாக இருக்காது என்கின்றன அந்த மாநில ஊடகங்கள். சித்துவின் கலகம் பாஜகவிற்கு நன்மையில் முடிந்தள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications