கொரோனா சந்தேகம்; குவாரண்டைனில் இருந்த மகளுக்கு உயிரிழந்த தந்தையை பார்க்க 3 நிமிட அவகாசம்
இம்பால்: மணிப்பூரில் கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு கடைசியாக அவரது தந்தையை பார்க்க வெறும் மூன்று நிமிடம் மட்டுமே சுகாதார அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். இந்த சோகமான சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தால் 22 வயதான அஞ்சலி ஹமங்தே மணிப்பூர் மாநிலம் தலைநகர் இம்பாலில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவரது தந்தை உடல் நலக்குறைவால செவ்வாய்கிழமை காலமானார். இதனால் கொரோனா சந்தேக அறிகுறி உள்ள மகளை அங்கிருந்து மணிப்பூரின் காங்போக்பிக்கு அழைத்து வந்தார்கள். உயிரிழந்த தந்தையை பாரக்க மகளுக்கு மூன்று நிமிடம் மட்டுமே அனுமதி அளித்தனர்.

கொரோனா சந்தேகத்திற்கு இடையே சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட தனது தந்தையை அந்த இளம்பெண், சவப்பெட்டி அருகே மண்டியிட்டு உள்ளே எட்டிப் பார்க்கிறார். ஆனால் அவளுடைய தாய், உற்றார், உறவினர்கள் என யாரும் அருகில் சென்று அந்த பெண் ஆறுதல்படுத்த முடியவில்லை. டாக்டர்கள் தங்கள் கையில் கட்டியிருந்த கை கடிகாரங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தனர், ஒதுக்கப்பட்ட மூன்று நிமிடங்கள் முடிந்தவுடன் அவர் சுகாதார அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இயங்கும் சிறப்பு ரயிலான ஷ்ராமிக் ரயிலில் அஞ்சலி ஹமங்தே (22 வயது) மே 25 அன்று சென்னையிலிருந்து மணிப்பூருக்கு திரும்பி வந்தார், பின்னர் அவருடன் பயணித்த மற்றொரு பயணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அவரும் இம்பாலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்படிருந்த அந்த பெண்ணின் தந்தை திடீரென உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கடைசியாக தனது தந்தையை சந்திக்க அந்த பெண் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, முழு பாதுகாப்பு உடைகளுடன், புதன்கிழமை தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்,
மணிப்பூரில் நேற்று மட்டும் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 121 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications