அட.. பாஜக லைப்ரரியா இது.. இப்படி கலக்குறாங்களே....?! புனித குரான், பைபிளை வைத்து அசத்தல்!
டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள பாஜக லைப்ரரியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளும வைக்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். ஏராளமான இந்துக்கள் புனித பயணம் மேற்கொள்ளும் ஒரு மாநிலமாகும்.
இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான இடமாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.

பிரதமர் மோடி தியானம்
அண்மையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் முடிந்த கையோடு உத்தரகாண்ட் மாநிலத்துக்கே புனித பயணம் மேற்கொண்டார். கேதார்நாத்தில் உள்ள பனிக்குகையில் அவர் விடிய விடிய மேற்கொண்ட 18 மணி நேர தியானம் நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.

சிறப்பான சம்பவம்
இந்துக்களின் சமயத்திருத்தலங்களை அதிகம் கொண்டுள்ள இம்மாநிலத்தில் உள்ள பாஜக நூலகத்தில் ஒரு சிறப்பான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிகழ்வு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாஜக அலுவலகத்தில் நூலகம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. அம்மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் உள்ளார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அங்குள்ள பாஜக அலுவலகத்தில், பாஜக ஒரு நூலகத்தை திறந்தது.

பாஜக நூலகத்தில் பைபிள் குரான்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் அம்மாநில பாஜக தலைவர் அஜய் பட் ஆகியோர் அந்த நூலகத்தை திறந்து வைத்தனர். இந்நிலையில் அங்குள்ள நூலகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளும் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பலே யோசனை
வேத புத்தகங்கள், ராமாயணம், பகவத் கீதை, அனுமர் புராணம் ஆகியவற்றுடன் குரானும், பைபிளும் வைக்கப்பட்டுள்ளது. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துதான் இந்த யோசனைக்கு காரணமாம்.

பாஜகவினர் தெரிந்துகொள்ள வேண்டும்
பாஜக நூலகத்திற்கு வரும் பாஜகவினர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ புனித நூல்கள் என்ன சொல்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் குரானும் பைபிளும் வைக்கப்பட்டிருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் ஷாதாப் ஷாம் தெரிவித்துள்ளார்.

உணர்வுகளை மதிக்கிறது பாஜக
பாஜக அக்கட்சியின் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிறது என்றும் அதனாலேயே புனித நூல்களான குரானும் பைபிளும் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாஜகவின் அந்த நூலகத்தில் கலாச்சாரம், வரலாறு, புவியியல், சமூக அறிவியல், கம்யூனிசம், புகழ்பெற்ற நபர்கள், ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

விவாத நிகழ்ச்சிகளுக்கு பயன்படும்
லைப்ரரிக்கு வரும் பாஜகவினரும், பொதுமக்களும் அனைத்து வகையான புத்தகங்களையும் படித்து அறிவை பெருக்கிக்கொள்ளும் வகையில் இந்த நூல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தேவையான புத்தகங்களை படிப்பவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரான் மற்றும் பைபில் ஆகியவற்றை படிப்பது விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாஜக நிர்வாகிகளுக்கு பயன்படும் வகையில் உள்ளது என லைப்ரரியின் மேலாளர் சஞ்சீவ் வினோதியா கூறியுள்ளார்.

பலரும் பாராட்டி வருகின்றன
மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு சிறுபான்மையினர்களின் உணர்வுகளை மதிக்காது, சிறுபான்மையின மக்களை ஒடுக்கும் அரசு, இந்துத்துவ கொள்கைகளுக்கே முன்னுரிமை வழங்கும் என எதிர்க்கட்சிகள் தெடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் எல்லா மதத்தையும் சமமாக பார்க்கிறது என்பதை கூறும் வகையில் இந்து புனித நூல்களுடன் குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டிருப்பது பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications