மே.வங்கத்தில் காங். இடதுசாரிகள் கை கோர்ப்பு- ஒரே மேடையில் ராகுல், புத்ததேவ் நாளை பிரசாரம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வரும் முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோர் ஒரே மேடையில் நாளை பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் நேற்று 4ம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்தது. எஞ்சிய 79 தொகுதிகளுக்கு ஏப்ரல் 30 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் வாக்குபதிவு நடைபெறுகிறது.
30-ல் மமதா தொகுதி வாக்குப் பதிவு
முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் வரும் 30-ந் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது, இதையொட்டி அங்கு எதிர்கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
ராகுலுடன் புத்ததேவ்
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நாளை மூத்த மார்க்சிஸ்ட் தலைவரும் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுடன் இணைந்து பார்க் சர்க்கஸ் மைதானத்தில் ஒரே மேடையில் பேசுகிறார்.
காங்கிரஸ்- இடதுசாரிகள்
இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்களான ரிதாபரதா பானர்ஜி, தீபக் தாஸ் குப்தா, பங்சா கோபால் சவுத்ரி ஆகியோரும் ஏற்கனவே ராகுல் காந்தியுடன் இணைந்து பிரசாரம் செய்துள்ளனர். ராகுல் காந்தி 3 பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு
கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கனா மற்றும் பார்க் சர்க்கஸ் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு ராகுல் பேசுகிறார். இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவருவது மேற்கு வங்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.